யாழ். காக்கைதீவு திண்மக்கழிவு மீள்சுழற்சி நிலையத்தினால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடுகளுக்கு நிரந்தரத் தீர்வு கோரி, பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் இன்று யாழ் மாநகர சபைக்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
ஜே88, ஜே85 மற்றும் நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட ஆறுகால்மடம் பழம் றோட் பகுதிகளில் வசிக்கும் மக்களே இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
யாழ் மாநகர சபையினால் திண்மக்கழிவுகளைத் தரம் பிரித்து, மீள்சுழற்சி மூலம் பசளையாக்கும் நோக்குடன் இந்த நிலையம் ஆரம்பிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரின் ஆட்சியின் கீழ், இந்த நிலையம் வினைத்திறனாகச் செயற்படுத்தப்பட்டு, பல மில்லியன் ரூபா பெறுமதியான பசளை விற்பனை செய்யப்பட்டதாகவும் மக்கள் சுட்டிக்காட்டினர்.
எனினும், தற்போது இந்த நிலையம் முறையாகப் பராமரிக்கப்படாமையே அனைத்துச் சிக்கல்களுக்கும் காரணமாகியுள்ளது.
மீள்சுழற்சிக்காகக் கொண்டுவரப்படும் கழிவுகள் பல நாட்களாகக் கிடப்பில் போடப்படுவதால், அவை அழுகி துர்நாற்றம் வீசுவதுடன், கழிவுநீர் வடிந்து சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளன.
இதனால் அப்பகுதியில் ஈக்களின் பெருக்கம் அதிகரித்துள்ளது.
இப்பிரச்சனையால் அப்பகுதி மக்கள் நாளாந்தம் கடும் சுகாதார அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இது குறித்துப் போராட்டக்காரர்கள் தெரிவிக்கையில் –
அழுகிய கழிவுகள் மற்றும் கழிவு நீரால் வயிற்றோட்டம், வாந்திபேதி, சொறி, சிரங்கு போன்ற நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வீடுகளுக்குள் கழிவுநீர் புகுவதால் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது யாழ் மாநகர சபையின் நிர்வாக அசமந்தப் போக்கே இந்த நிலைக்கு முழுக்காரணம்.
அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, கழிவு முகாமைத்துவத்தில் முறையான பொறிமுறையை ஏற்படுத்தி, தங்களுக்குக் ஏற்பட்டுள்ள சுகாதார நெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வினைப் பெற்றுத்தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்




