அன்பளிப்புகளைப் பெற்றுக்கொள்ளாதிருத்தல் மற்றும் புத்தாண்டு உபசரிப்பு நடவடிக்கைகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பில் பொலிஸ் மா அதிபரினால் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, பல பொலிஸ் நிலையங்களில் புத்தாண்டு உபசரிப்புகளை நடத்துவதற்காக உத்தியோகத்தர்களிடம் பணம் வசூலிக்கத் தயாராகி வருவதாகவும், வர்த்தக சமூகத்தின் பங்களிப்புடன் புத்தாண்டு விருந்துகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கிடைத்த தகவல்களைத் தொடர்ந்தே இந்த அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
விசேடமாக, சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் வகையில் வழங்கப்படும் அன்பளிப்புப் பொதிகள் மற்றும் பரிசு வவுச்சர்களை வழங்கக்கூடாது எனவும், சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் அத்தகைய பொருட்களைப் பொறுப்பேற்கக் கூடாது எனவும் பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார்.
அதேபோல், வெளித்தரப்பினர் அல்லது வர்த்தக சமூகத்தின் பங்களிப்புடன் பொலிஸ் நிலையங்களில் சிங்கள புத்தாண்டு விருந்துகளை நடத்தக்கூடாது என்றும் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் புத்தாண்டு உபசரிப்பு நடவடிக்கைகளுக்காக, ஒரு பொலிஸ் உத்தியோகத்தருக்கு 250 ரூபாய் வீதம் பொலிஸ் வெகுமதி நிதியத்திலிருந்து வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவுறுத்தல்களை மீறிச் செயற்படும் உத்தியோகத்தர்களுக்கு எதிராகத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு மேற்பார்வை அதிகாரிகளுக்குப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் 17 பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு உட்பட்டு, பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களுக்கு அமைய இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.



