மண்டைதீவு படுகொலையின் வழக்கு இன்றையதினம் (31) ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மீண்டும் எதிர்வரும் ஜூலை 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
90களில் இராணுவத்தின் கொலைவெறியால் தீவகத்தை உலுக்கிய மனிதப் படுகொலையின் மண்டைதீவு புதைகுழி தொடர்பான வழக்கின் விசாரணை இன்று (பங்குனி 31) ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் அனீபா ரஜீவ்
முன்னிலையில் பொலிசாரின் சான்று சமர்ப்பணத்துக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
காணாமல் போனோர் அலுவலகத்தின் சட்டத்தரணி பூர்ணி மரியநாயகம் மற்றும் அதன் பிராந்திய இணைப்பாளர் த.செல்வக்குமார், வேலணை பிரதேச சபையின் உறுப்பினரும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோர் இன்றைய தினம் குறித்த வழக்கு சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகி இருந்த நிலையில் வழக்கின் சான்றுகளை பொலிசார் நீதிபதிக்கு சமர்ப்பித்தனர்.
கடந்த வருடம் செப்ரெம்பர் மாதம் 04 ஆம் திகதியன்று குறித்த சம்பவத்தில் தனது மகனை பறிகொடுத்த 81 வயதுடைய ஸ்ரிபன் மரில்டா என்பவர் மற்றும் வேலணை பிரதேச சபையின் உறுப்பினரும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோரால் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இன்னிலையில் இந்த வழக்கு கடந்த 17.09.2025 அன்று ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இதன்போது, ஊர்காவற்துறை பொலிஸாரினால் குறித்த புதைகுழியின் அகழ்வுப் பணியை முன்னெடுப்பதற்கான வசதிகள் இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்து.
இதனையடுத்து இவ் வழக்கு யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவினரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளதுடன் மண்டைதீவு மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுக்கு நீதிவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இன்னிலையிலேயே குறித்த வழக்கு ஜூலை 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



