முல்லைத்தீவு, முத்தையன்கட்டில் இராணுவ முகாமுக்கு சென்ற பின்னர் காணாமல் போனதாக கூறப்படும் இளைஞனின் சடலம், முத்தையன்கட்டு குளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
இன்று (9) காலையில் சடலம் மீட்கப்பட்டது.
முத்தையன்கட்டு குளத்துக்கு அருகிலுள்ள இராணுவ முகாமை அகற்ற முன்னாயத்தங்கள் நடந்து வரும் நிலையில், இராணுவச்சிப்பாய் ஒருவர் தகரங்கள் தரலாம் என கூறியதை நம்பி, 4 இளைஞர்கள் நேற்று அங்கு சென்றதாக பிரதேசவாசிகள் கூறுகிறார்கள்.
பின்னர், இராணுவ முகாமில் இளைஞர்களுக்கும் இராணுவத்தினருக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டு, இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாகவும், இளைஞர்கள் ஒவ்வொரு திசையாக தப்பியோடியதாகவும் கூறுகிறார்கள்.
3 இளைஞர்கள் வீடு திரும்பிய நிலையில், ஒருவர் காணாமல் போயிருந்தார். பிரதேசவாசிகள் நேற்று அவரை தேடினார்கள். ஆனால் பலன் கிடைக்கவில்லை. இதன்போது பொதுமக்களுக்கும் இராணுவத்துக்குமிடையில் முறுகலும் ஏற்பட்டது.
இந்த நிலையில், காணாமல் போன இளைஞனின் சடலம் இன்று காலையில் முத்தையன்கட்டு குளத்தில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.



