யாழ்ப்பாணம்-கண்டி பிரதான வீதியில் வவுனியா, ஓமந்தை பகுதியில் இன்று (26) அதிகாலை 4.40 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் ஒன்று, யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பருடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் காரின் ஓட்டுநர் உயிரிழந்தார். காரில் காயமடைந்த மூன்று பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். விபத்தில் தந்தை உயிரிழந்தார். காரை ஓட்டிச் சென்றவர் தூங்கியதால் விபத்து நிகழ்ந்ததாக பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அலுவலர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பிரபாகரசர்மா (50) என்பவரே உயிரிழந்தார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளரான அவரது மனைவியும் இரு பிள்ளைகளும் காயமடைந்துள்ளனர்.
இவர்கள் இமயமலைக்கு ஆன்மீக தரிசனம் சென்றுவிட்டு யாழ் திரும்பிய போது விபத்தில் சிக்கியுள்ளனர்.




