கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 36 கோடி ரூபாய் பெறுமதியான “ஹஷிஷ்” போதைப்பொருளுடன் கனேடிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவின் டொராண்டோவில் இருந்து ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி நகர வழியாக நேற்று (15.02.2025) இரவு இலங்கைக்கு வந்தபோது, சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுங்க அதிகாரிகளுக்குக் கிடைத்த சர்வதேச புலனாய்வு தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 36 வயதான இந்த கனேடிய பெண்ணின் இரண்டு பயணப்பைகளில் மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 36.5 கிலோ “ஹஷிஷ்” போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட குறித்த கனேடிய பெண் கடுமையாக போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், அவர் கொண்டு வந்த போதைப்பொருள் இலங்கையில் பதுக்கி வைக்கப்பட்டு மீண்டும் ஏற்றுமதி செய்யப்படுவதற்கான நிகழ்வாக இருக்கலாம் என்றும் சுங்க அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக, கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையுடன் சந்தேகநபரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




