கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சட்டவிரோதமான முறையில் 7 வார சிசு கருவை அழித்ததாக கூறப்படும் ஒரு பிள்ளையின் தாயை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் திருமதி பவித்ரா சஞ்சீவனி பத்திராஜா இன்று (17) உத்தரவிட்டுள்ளார். .
தெமட்டகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட கொழும்பு 14, மாதம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான பெண்ணின் கணவர் சிசிர சம்பத், தெமட்டகொட பொலிஸாரிடம் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மனைவி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கருக்கலைப்பு செய்ததாக சந்தேகிக்கப்படும் வைத்தியரை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
சந்தேகநபர் நவம்பர் மாதம் 12ஆம் திகதி கருக்கலைப்பு செய்துள்ளதாக மனுதாரர் சார்பில் சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
மருத்துவ ஆலோசனையின் பின், 37500 ரூபாவுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.
இரு தரப்பினரும் முன்வைத்த உண்மைகளை கருத்திற்கொண்ட மேலதிக நீதவான் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன் கருக்கலைப்பு செய்ததாக கூறப்படும் வைத்தியருக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தெமட்டகொட பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.




