கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில், ஆங்கில மொழி மற்றும் நாடகப் போட்டிகளுக்கான நடுவர்களாகச் செயற்படவுள்ள வளவாளர்களை உருவாக்கும் Training of Trainers (ToT) பயிற்சி செயலமர்வு நடைபெற்றது.
மகாஓயா, அம்பாறை, திருக்கோவில், அக்கரைப்பற்று, கல்முனை மற்றும் சம்மாந்துறை ஆகிய கல்வி வலயங்களைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட ஆங்கில மொழி ஆசிரியர்கள் இச்செயலமர்வில் பங்கேற்றனர். செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில், சம்மாந்துறை கல்வி வலயத்தின் ஆங்கிலப் பாடத்திற்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் அப்துல் நஸீர் அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் என்.எம். மாலிக் அப்துல் அவர்களினால் “The Gold Standard in Competition Judging” எனும் தலைப்பில் முக்கிய பயிற்சி அமர்வு நடத்தப்பட்டது. இவ்வமர்வில் போட்டிகளை மதிப்பீடு செய்யும் போது ஏற்படக்கூடிய உளவியல் சார்ந்த பல்வேறு பக்கச்சார்புகள் தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. குறிப்பாக, Halo Effect, First Impression Bias, Leniency and Severity, Central Tendency மற்றும் Demographic Bias போன்ற காரணிகள் போட்டியாளர்களுக்கான மதிப்பெண்களில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பது நடைமுறைச் செயற்பாடுகளுடன் விளக்கப்பட்டது.
மேலும், போட்டிகளின் மதிப்பீட்டின்போது அதிகாரபூர்வமான மதிப்பீட்டு அளவுகோல்களை முறையாகப் பின்பற்றுவதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது. இதன் மூலம் போட்டியாளர்களின் திறமைகளை பாரபட்சமின்றி, துல்லியமாக மதிப்பீடு செய்வதற்கான வழிமுறைகள் தொடர்பில் பங்கேற்பாளர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
இரண்டாவது அமர்வை இருமொழிக் கல்விக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் சபீர் முஸ்தபா அவர்கள் நடத்தினார். இவ்வமர்வில் கடந்த காலங்களில் போட்டி மதிப்பீடுகளின்போது எதிர்கொள்ளப்பட்ட பல்வேறு சவால்கள் மற்றும் அவற்றை எதிர்காலத்தில் எவ்வாறு தவிர்ப்பது என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
செயலமர்வு முழுவதும் பங்கேற்பாளர்களைச் சுறுசுறுப்பாக ஈடுபடுத்தும் வகையில் கலந்துரையாடல்கள், ஆக்கபூர்வமான விவாதங்கள் மற்றும் நடைமுறைச் செயற்பாடுகள் இடம்பெற்றன. இதன் மூலம் எதிர்வரும் ஆங்கில மொழி மற்றும் நாடகப் போட்டிகளை மிகவும் தரமானதும், நியாயமானதுமான முறையில் நடத்துவதற்கான நடைமுறைத் தீர்வுகள் முன்வைக்கப்பட்டன.
செயலமர்வின் முக்கிய அம்சமாக, பங்கேற்பாளர்கள் மாதிரி எழுத்துப் பிரதிகளை மதிப்பீடு செய்யும் குழுச் செயற்பாட்டில் ஈடுபட்டனர். பின்னர், அவர்களது மதிப்பீட்டு முறைகளை கல்வி அதிகாரிகள் ஆராய்ந்து, அவை தரப்படுத்தப்பட்ட மதிப்பீட்டு அளவுகோல்களுடன் ஒத்துப்போகின்றனவா என்பது தொடர்பில் வழிகாட்டுதல்கள் வழங்கினர்.




