மட்டக்களப்பில் நெல் கொள்வனவு மற்றும் விலையை அதிகரிக்கக் கோரி இன்று செவ்வாய்க்கிழமை (23) மாவட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து காந்தி பூங்காவில் இருந்து ஆர்ப்பாட்ட ஊர்வலமாக மண்முனை வடக்கு பிரதேச செயலகம் வரை சென்று பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
மட்டக்களப்பு மாவட்ட விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நெல்லின் விலையை அதிகரிக்க கோரி ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்ததையடுத்து காந்தி பூங்காவில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் இன்று காலை 10.00 மணிக்கு ஒன்றிணைந்தனர்.
இதையடுத்து நெல்லின் விலையை அதிகரித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்போம் எனும் தொனிப் பொருளில், உற்பத்தி செலவுக்கு நிகரான நியாயமான விலை நெல்லுக்கு வழங்கப்பட வேண்டும். நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக அரசே நேரடியாக நெல்லைக் கொள்வனவு செய்ய வேண்டும்.
விவசாயத்திற்கான உரம் உள்ளிட்ட ஏனைய இரசாயனங்கள் மற்றும் உள்ளீடுகள் நியாயமான விலையில் கிடைக்கப் பெற வேண்டும்.எங்கள் உழைப்புக்கு உரிய விலையை வழங்க வேண்டும். அரிசி இறக்குமதி உடன் நிறுத்த வேண்டும். விவசாயின் வயிற்றில் அடியாதே, உலர்த்தப்படாத நெல்லுக்கான நிர்ணயவிலையாக 110 ரூபா தரவும்,
விவசாயமே நாட்டின் முதுகெலும்பு என சுலேகங்கள் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்ட ஊர்வலமாக அங்கிருந்து நகர் மணிக்கூட்டு வீதி சுற்றுவட்டம் ஊடாக சென்றல் வீதி ஊடாக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் ஜனாதிபதிக்கு கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றை பிரதேச செயலக பிரதி செயலாளரிடம் கையளித்த பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.




