மின்னல் தாக்கியதால் சிட்னி நோக்கிச் சென்ற ஸ்ரீலங்கன் விமானம் அவசரமாக கட்டுநாயக்காவில் தரையிறக்கம்
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை நோக்கிச் சென்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மின்னல் தாக்கியதைத் தொடர்ந்து நேற்று இரவு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் UL606 என்ற விமானத்தின் ஒரு இயந்திரம் (Engine) மின்னல் தாக்கத்துக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் மீண்டும் கட்டுநாயக்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டு பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
பின்னர் பயணிகள் மாற்று விமானம் ஒன்றின் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் காரணமாக ஐந்து மணி நேரத்திற்கும் அதிகமான தாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், விமானத்திற்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.




