ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது உறவினர்களும், கொடூரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகள் குறித்த விசாரணைகளுக்குத் தடை ஏற்படுத்தக் கூடாது என்று கோரி, நேற்று (11) நீர்கொழும்பு, கட்டுவபிட்டியவில் அமைதிப் போராட்டம் நடத்தினர்.
“ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்த நியாயமான விசாரணைகளுக்குத் தடை ஏற்படுத்துவதை நிறுத்துங்கள்”, “விசாரணையாளர்களையும் சட்டமா அதிபரையும் அச்சுறுத்துபவர்களைக் கைது செய்யுங்கள்”, மற்றும் “ஈஸ்டர் குண்டுவெடிப்புகளில் பாதிக்கப்பட்டவர்களின் குரல்” என்று எழுதப்பட்ட பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளுடன் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் தங்கள் பிள்ளைகளை இழந்த பெற்றோரும், காயமடைந்தவர்களின் பெற்றோரும், இந்த வலியை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்று கூறினர். “நாங்கள் ஒவ்வொரு நாளும் துக்கத்துடனும் கண்ணீருடனும் வாழ்கிறோம். இதைச் செய்தவர் யார் என்பதை எங்களுக்கு வெளிப்படுத்துமாறு கடவுளிடம் வேண்டுகிறோம்.”
பெற்றோர்களும் உறவினர்களும் குழந்தைகளின் புகைப்படங்களை ஏந்தியபடி போராட்டத்தில் கலந்துகொண்டு, இது தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளில் அரசாங்கம் தலையிடக் கூடாது என்று கேட்டுக்கொண்டனர்.




