வழக்கத்திற்கு மாறாக அதிக வருமானத்தை உறுதியளிக்கும் தோட்ட முதலீட்டுத் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது. அத்தகைய திட்டங்கள் மோசடியானவையாக இருக்கலாம் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
ஒரு பொது விழிப்புணர்வு அறிவிப்பில், தோட்ட மோசடிகள் பெரும்பாலும் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளையே சார்ந்துள்ளன என்று மத்திய வங்கி கூறியுள்ளதுடன், முதலீட்டாளர்கள் எந்தவொரு கட்டணத்தையும் செலுத்துவதற்கு முன்பு, கூறப்படும் வாக்குறுதிகளைச் சரிபார்க்குமாறும் வலியுறுத்தியுள்ளது.
குறுகிய காலத்திற்குள் மிக அதிக வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கும், பயிர் விளைச்சல் இல்லாவிட்டாலும் இலாபத்தை உறுதியளிக்கும், அல்லது கண்டறிவதற்கு கடினமான முகவர்களை உள்ளடக்கிய திட்டங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.
நிறுவனங்களின் பதிவாளர் போன்ற நிறுவனங்களிலோ அல்லது அடகு வணிகர்கள் கட்டளைச் சட்டத்தின் கீழோ பதிவு செய்துகொள்வது, பொதுமக்களிடமிருந்து வைப்புகளைப் பெறுவதற்கான உரிமத்தை தானாகவே வழங்கிவிடாது என்றும் மத்திய வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது.
வழக்கத்திற்கு மாறாக அதிக வருமானம் தரும் திட்டங்களைக் கேள்விக்குட்படுத்தவும், அழுத்தத்தின் கீழ் அவசர அவசரமாகப் பணம் செலுத்துவதைத் தவிர்க்கவும், திட்டங்களில் சம்பந்தப்பட்ட நிலத்தின் சட்டப்பூர்வ உரிமையைச் சரிபார்க்கவும், முதலீடு செய்வதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கவும் வருங்கால முதலீட்டாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
“இந்த எச்சரிக்கை அறிகுறிகளுக்குப் பதில் ஆம் எனில், அது ஒரு தோட்ட மோசடியாக இருக்கலாம்,” என எச்சரித்த மத்திய வங்கி, “முதலீடு செய்வதற்கு முன் சரிபார்க்கவும்” எனப் பொதுமக்களை வலியுறுத்தியது.




