மதுபானம் அருந்த ஆயிரம் ரூபா வழங்காத தாயை 19 வயது மகன் தள்ளி வீழ்தியதில் அவர் தரையில் விழ்ந்து உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு சித்தாண்டியில் நேற்று வெள்ளிக்கிழமை (17) மாலையில் இடம்பெற்றுள்ளதாகவும் தாக்குதலை மேற்கொண்ட மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக சந்திவெளி பொலிசார் தெரிவித்தனர்.
பழைய சந்தை வீதி, சித்தாண்டி 4ம் பிரிவைச் சேர்ந்த 42 வயதுடைய குமாரசாமி வசந்தா என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று மாலை 6.00 மணியளவில் 19 வயதுடைய மகன் தனது தாயாரிடம் மதுபானம் அருந்துவதற்கு ஆயிரம் ரூபா கேட்டுள்ள நிலையில், தாயார் தன்னிடம் பணம் இல்லை என தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த மகன் தாயாரை பிடித்து தள்ளியதையடுத்து அவர் தரையில் வீழ்ந்தார். இதன்போது, அவரது தலை பலமாக தாக்கப்பட்டுள்ளது. இதனால் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தாக்குதலை நடாத்திய இளைஞன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இதனையடுத்து குறித்த இளைஞனை கைது செய்ததுடன் உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
-கனகராஜா சரவணன்-



