வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரத்தில் இளைஞர் ஒருவர் நேற்றிரவு கூரிய ஆயுதத்தால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மற்றைய இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொல்புரம், கொட்டடியம்பதி ஆதி முத்துமாரியம்மன் கோவிலடியை சேர்ந்த குகதீஸ்வரன் மயூரன் (27) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு இளைஞனும், சந்தேகநபரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்றிரவு குறித்த அம்மன் ஆலயத்தில் புனரமைப்பு பணிகள் இடம்பெற்றன. அந்த இடத்திற்கு மூன்று நண்பர்களுடன் வந்த சந்தேகநபர் முரண்பாட்டில் ஈடுபட்டார். இதன்போது குறித்த சந்தேகநபரின் தாக்குதலுக்கு உள்ளாகி பானுஷன் என்ற இளைஞர் படுகாயமடைந்தார்.
அதன்பின்னர் சந்தேகநபர் தப்பி செல்ல முற்பட்டபோது கொலையான மயூரன் சந்தேகநபரை பிடிப்பதற்கு முயற்சித்தார். இதன்போது சந்தேகநபர் மயூரன் மீதும் அதே கூரிய ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொண்டதனால் குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சந்தேகநபர் யுவதியொருவரை காதலிப்பதாகவும், யுவதியின் சகோதரன் அதற்கு அனுமதிக்கவில்லையென்றும் தெரிவிக்கப்படுகிறது. யுவதியின் சகோதரன் வெளிநாடு சென்ற பின்னர், அவரது நண்பர் மூலம் கண்காணித்து வந்ததாகவும் தெரிய வருகிறது. காதலியின் அண்ணனின் நண்பன், தனது காதலுக்கு இடையூறாக இருக்கிறார் என குறிப்பிட்டே, அவரை கொலை செய்ததாக தெரிய வருகிறது.
இதை தொடர்ந்து, சந்தேகநபரும் வைத்தியசாலையில் பொலிஸ் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் தப்பிச் சென்றுள்ள நிலையில். வைத்தியசாலையில் சிகிச்சை பெறுபவர் உட்பட இருவரை பொலிஸார் கைது செய்தனர். இது குறித்து மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



