யாழ்ப்பாண பல்கலைகழக்கழ சித்த மருத்துவபீட விரிவுரையாளரான தயாளினி திலீபன், அவரது மகளின் துணைவரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
வீட்டிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட தயாளினி கொலை செய்யப்பட்டு, சாவகச்சேரி- தனங்கிளப்பு வெளி பகுதியில் வீசப்பட்டுள்ளார். அவரது சடலம் இன்று (21) மீட்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை (19) யாழ்ப்பாணம், பாண்டியன்தாழ்வுப் பகுதியில் உள்ள விரிவுரையாளர் தயாளினியின் வீட்டிலிருந்து, விரிவுரையாளரும் அவரது மகளும் கடத்தப்பட்டதாக , விரிவுரையாளரின் மகன் பொலிஸில் முறைப்பாடு ஒன்றைச் செய்திருந்தார்.
முறைப்பாட்டின் அடிப்படையில் கடத்தப்பட்ட விரிவுரையாளரின் வீட்டுக்கு விரைந்த பொலிஸார், ளையும், அறுந்து கிடந்த தலைமுடிகளையும் கண்டனர். விரிவுரையாளரின் காரிலேயே அவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
உடனடியாக விசாரணைகளை முடுக்கிவிட்ட பொலிஸார், பரந்தன் பகுதியில் உள்ள ஏ.டி.எம் இயந்திரத்தில் சந்தேகநபர் பணம் எடுத்தது உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து, திருகோணமலைப் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கியூ.ஆர் குறியீட்டைப் பயன்படுத்தி வாகனத்திற்கு எரிபொருள் நிரப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நிலையத்தின் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு விரட்டிச் சென்ற பொலிஸார், நேற்று (20) திருகோணமலையில் வைத்து விரிவுரையாளரின் 19 வயது மகளையும், அவரது துணைவரையும் கைது செய்தனர்.
யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்ட இருவரிடமும் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில், மருமகனின் கொடூரத் தாக்குதலுக்கு விரிவுரையாளர் தயாளினி பலியானது அம்பலமானது. கொலையை மறைக்கத் திட்டமிட்ட இருவரும், கடத்தல் நாடகமாடி, சடலத்தைத் தனங்கிளப்பு காற்றாலைப் பகுதிக்கு எடுத்துச் சென்று அங்கே வீசிவிட்டுத் தப்பியோடியதை ஒப்புக்கொண்டுள்ளனர்.
விரிவுரையாளரின் மகள், மேற்படி இளைஞனை திருமணம் செய்துள்ளார். எனினும், இளைஞனின் நடத்தைகளில் அதிருப்தியடைந்த பின்னர், மகளுக்கு விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 19ஆம் திகதி இரவு திடீரென விரிவுரையாளரின் வீட்டுக்குள் நுழைந்த இளைஞன், மகளை அழைத்து சென்றதுடன், தாயாரையும் அவரது காரிலேயே கடத்திச் சென்றுள்ளார்.



