ஹட்டன், ருவன்புரவில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஒருவர் கடந்த 27 ஆம் திகதி உயிரிழந்ததாகவும், ஐந்து பேர் டிக்கோயா ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஹட்டன் காவல்துறையினர் தெரிவித்தனர்.
தாக்குதலுக்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்தவர்களில் ஒருவர், கடுமையான நிலைமை காரணமாக கண்டி போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 27 ஆம் திகதி இரவு உயிரிழந்ததாக ஹட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஹட்டன், ருவன்புரவில் வசித்து வந்த 39 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
அந்த பகுதியில் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் தொடர்பில் இரு குழுக்களுக்கிடையில் கடந்த 24 ஆம் திகதி மோதல் ஏற்பட்டுள்ளது. குடிநீர் வழங்கப்பட்ட பிரச்சினை தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே பல சந்தர்ப்பங்களில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், பின்னர் அது மோதலாக மாறி, ஆறு பேர் காயமடைந்து டிக்கோயா ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மோதலில் ஈடுபட்ட இரு தரப்பையும் சேர்ந்த மேலும் மூன்று சந்தேக நபர்கள் கடந்த 27 ஆம் திகதி கைது செய்யப்பட்டு ஹட்டன் மாவட்ட நீதவான் பீட்டர் போல் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர், அதன் பின்னர் அவர்கள் மார்ச் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் இறந்தவரின் சகோதரரும் அடங்குவதாகவும், டிக்கோயா ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பிறகு அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும் காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.



