தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும், பெண்ணொருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
அக்குரேகொட பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் வாகன தரிப்பிடத்தில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இருவரும் கார் ஒன்றின் உள்ளேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொல்லப்பட்டவர்களில் ஒருவர் சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருடன் இருந்த பெண் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. புத்திக மல்லவராச்சி கொழும்பு உயர்நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக செயற்பட்டு வருகிறார்.
ரி56 ரகத் துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
யாரால், எந்தக் காரணத்திற்காக இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பது குறித்து தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



