கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் தனியான பிராந்திய காரியாலம் அமைக்கப்படுவது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சராக வைத்திய கலாநிதி சுசில் ரணசிங்ஹ தெரிவித்துள்ளார்.
கடந்த புதன் கிழமை கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் இரணைமடுகுளத்தை பார்வையிட்டதோடு, புதிதாக அமைக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் பார்வையிட்ட பின்னர் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விரு மாவட்டங்களின் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலைமை காணப்படுகிறது.கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது 12 ஆயிரம் நீர் இணைப்புக்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட நீர் இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன நாளாந்தம் நீர் இணைப்புக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் பொருட்டு இவ்விரு மாவட்டங்களில் வாழ்கின்ற மக்களுக்கு பல்வேறு தேவைகள் தினமும் ஏற்படுகின்ற அனால் அதனை உடனடியாக விரைந்து மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் இங்கு இம் மாவட்டங்களுக்கு என தனியான பிராந்திய முகாமையாளர் காரியாலயம் இல்லாமை ஆகும். தற்போது இவ்விரு மாவட்ட மக்களுக்கும் கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு 66 கிலோ மீற்றரும் முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு 114 கிலோ மீற்றரும் பயணித்தே தங்களது தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய மாவட்டங்களில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைகயின் பிராந்திய காரியாலயம் தனித்தனியான மாவட்ட ரீதியாக உண்டு. ஆனால் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்கள் மாத்திரமே இப்பொழுதும் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயத்துடன் இணைக்கப்பட்ட மாவட்டங்களாக காணப்படுகின்றன. இது மக்களுக்கு வினைத்திறனான விரைவான சேவையை வழங்குவதில் நெருக்கடியை ஏற்படுத்துகின்றன.
எனவே கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு என தனியான பிராந்திய முகாமையாளர் காரியாலயம் ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என அமைச்சரிடம் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் இந்த விடயம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபரும் தனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். எனவே இங்கு எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள
அபிவிருத்திகளை கவனத்தில் கொண்டு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் உயரதிகாரிகளுடனும் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.



