திருகோணமலை பகுதியில் சர்ச்சைக்குரிய புத்தர் சிலை வைக்கப்பட்ட சம்பவத்தில், கரையோர பாதுகாப்பு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் மேலும் 5 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலையிலுள்ள விகாரையொன்றில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்றை அகற்றுவதற்கு முற்பட்டதையடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி அங்கு அமைதியற்ற சூழல் ஏற்பட்டிருந்தது.
எனினும், குறித்த கட்டுமானங்கள் அனுமதி இன்றி முன்னெடுக்கப்பட்டதாகக் கூறி, கடற்கரை பாதுகாப்புத் திணைக்களம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தது.
இந்த நிலையில், புத்தர் சிலையை அகற்ற முயற்சித்த போது, பிக்குகள் மற்றும் பிரதேச மக்களிடமிருந்து பொலிஸாருக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக டிசம்பர் 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு 11 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்படி, நேற்று 9 பேர் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்டு, நான்கு பிக்குகள் மற்றும் 5 பொதுமக்கள் உட்பட 9 பேரையும் விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதன்போது, குறித்த குழுவினரை ஜனவரி மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



