முறையான முன்னாறிவிப்போ அன்றி தெரியப்படுத்தலோ இன்றி வீதியில் நிற்பவர்களை சந்திப்பதற்கு நான் தயாரில்லை என கூறியுள்ள யாழ் மாநகர முதல்வர் மதிவதனி சதிகள், பின்னணிகள் மூலம் போராட்டத்தில் இறங்கியுள்ள இவர்கள், வேண்டுமானால் தன்னை எழுத்துமூலமான ஆவணத்துடன் நேரடியாக வந்து சந்தித்தால் அது தொடர்பில் பரீசலிக்கலாம் என்றும் தெரிவித்தார்.
பொறியியலாளரது கட்டுப்பட்டிலிருந்து தம்மை விடுவித்து பிராந்திய சுகாதார சேவை அதிகாரியின் கீழ் செயற்பட அனுமதிக்குமறு கோரி யாழ் மாநகர சுகாதார சிற்றூழியர்கள் பணிப் பகிஸ்கரிப்பு போரட்டம் ஒன்றை நேற்று (11) முன்னெடுத்தனர்.
யாழ் மாநகரின் மாதாந்த அமர்வு நேற்று இடம்பெற்ற நிலையில் இது தொடர்பில் உறுப்பினர்கள் முதல்வரிடம் கேள்வி எழுப்பிய நிலையிலேயே அவர் இவ்வாறு கூறியிருந்தார்.
அனைத்து மாநகர, நகரசபைகளினது சுகாதார பகுதிகள் பிராந்திய சுகாதார அதிகாரியின் கீழ் தான் இருந்து வருகின்றது.
ஆனால் யாழ் மாநகரின் சுகாதார பிரிவு மட்டும் பொறியியலாளரது கட்டுப்பாட்டில் இருக்கின்றது.
அதனால் நாளாந்தம் பல்வேறு நடைமுறைப் பிரச்சினைகள் உருவாகிவருகின்றது.
எனவே இவ்வாறு இருக்கும் நடைமுறையை மாற்றி பிராந்திய சுகதார அதிகாரியின் கீழ் கொண்டுவரல் வேண்டும்.
அத்துடன் ஊழியர்களது நிரந்தர நியமனம், இடமாற்றம், உழவு இயந்திர ஒப்பந்தங்கள் மூலம் வகைதெரியப்படும் திண்மக்கழிவுகள் பிரித்தாழ்கையில் இருக்கும் குழப்பங்கள் உள்ளிட்ட சில நடைமுறை பிரச்சினைகளுக்கு தீர்வு, கண்காணிப்பாளர்களது இடமாற்றம் உள்ளிட்ட விடையங்களை முன்னிறுத்தி ஊழியர்கள் போராட்டம் முன்னெடுத்துள்ளனர்.
இவர்களது பிரச்சினைக்கு தீர்வை வழங்க மாநகரசபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உறுபினர்கள் வலியுறுத்தினர்.
யாழ் மாநகரசபையின் முதல்வராக இலங்கை தமிழ் அரசு கட்சியை சேர்ந்த மதிவதனி செயற்படுகிறார். கடந்த உள்ளூராட்சி தேர்தலில் யாழ் மாநகரசபைக்காக வெற்றியீட்டிய உறுப்பினர்களில், மாநகரசபை முதல்வராக நியமிக்கத்தக்கவர்கள் யாருமில்லையென்ற குழப்பம் கட்சிக்குள் ஏற்பட்ட போது, “சொன்னதை கேட்டு செய்வார்“ என்ற நம்பிக்கையில் மதிவதனி முதல்வராக கட்சித் தலைமையால் நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



