கொச்சியில் ஐ.டி ஊழியரை கடத்தி தாக்கியதாக நடிகை லட்சுமி மேனன் மற்றும் மூன்று பேர் மீது எர்ணாகுளம் வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள லட்சுமி மேனனை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் கொச்சியில் உள்ள ஒரு பாரில் லட்சுமி மேனன் தரப்புக்கும், ஆலுவாவைச் சேர்ந்த ஐடி ஊழியர் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து அன்று இரவு எர்ணாகுளம் வடக்கு ரயில்வே மேம்பாலத்தில், லட்சுமி மேனனுடன் வந்தவர்கள் ஐ.டி ஊழியரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடத்தப்பட்டு தாக்கப்பட்ட ஆலுவாவைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் அளித்த புகாரின் அடிப்படையில், லட்சுமி மேனன் மற்றும் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட மிதுன், அனீஷ் மற்றும் சோனமோல் ஆகிய மூன்று பேர் ஏற்கனவே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகை லட்சுமி மேனனின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள லட்சுமி மேனனை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
இதுகுறித்து எர்ணாகுளம் வடக்கு போலீசார், ‘நடிகை மற்றும் மூன்று பேர், ஐ.டி ஊழியர் மற்றும் நண்பர்களின் காரைப் பின்தொடர்ந்து பாலத்தில் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். அங்கு அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் ஐ.டி ஊழியரை வலுக்கட்டாயமாக தங்கள் காரில் இழுத்து வேகமாக ஏற்றினர். இதனையடுத்து பரவூரில் உள்ள வெடிமாரா சந்திப்பில் இறக்கிவிடப்படும் வரை அவர்கள் ஐ.டி ஊழியரை காரில் வைத்து கடுமையாக தாக்கினர்” என்று தெரிவித்தனர்.
நடிகையை கைது செய்ய இடைக்கால தடை
ஐடி ஊழியரை காரை மறித்து தாக்கிய வழக்கில் நடிகை லட்சுமி மேனன் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரினார். இந்த வழக்கில் மூன்றாவது குற்றவாளியான லட்சுமி தற்போது தலைமறைவாக உள்ளார். நடிகையுடன் இருந்த மிதுன் மற்றும் அனீஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களுடன் மற்றொரு பெண் தோழியும் இருந்தார்.
ஆலுவாவைச் சேர்ந்த ஐடி நிறுவன ஊழியர் ஒருவர், லட்சுமி மேனன் மற்றும் அவரது கும்பலால் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாக புகார் அளித்தார். நடிகை நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்ததை அடுத்து, அவரது கைது நடவடிக்கையை நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. ஓணம் பண்டிகைக்குப் பிறகு பரிசீலிக்க வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதுவரை அவரை கைது செய்யக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புகார்தாரர் ஒரு பாரில் தன்னை வாய்மொழியாகவும் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தியதாக லட்சுமி தனது முன்ஜாமீன் மனுவில் குற்றம் சாட்டினார். புகார்தாரர் பாரை விட்டு வெளியேறிய பிறகு காரில் தன்னைப் பின்தொடர்ந்து வந்ததாகவும், பீர் பாட்டிலால் தாக்கியதாகவும் அவர் கூறினார். ஐடி ஊழியர் அளித்த புகாரை அவர் நிராகரித்து, அது ஜோடிக்கப்பட்டதாகக் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு கொச்சியில் உள்ள பானர்ஜி சாலையில் உள்ள ஒரு பாரில் வாக்குவாதம் மற்றும் கைகலப்பு நடந்தது. இரவு 11.45 மணியளவில் வடக்கு பாலத்தில் ஐடி ஊழியரின் காரை நிறுத்தி புகார்தாரரை வெளியே இழுத்துச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டவர் எஃப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் புகார்தாரரை மற்றொரு காரில் தள்ளிவிட்டு, அங்கு அவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், அவர் ஆலுவா-பராவூர் சந்திப்பில் இறக்கிவிடப்பட்டார். திங்களன்று வடக்கு காவல் நிலையத்தில் அந்த இளைஞர் அளித்த புகாரைத் தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் காரின் எண் தகட்டை மையமாகக் கொண்ட விசாரணையின் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.



