எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்திருந்த கதவடைப்பு இன்று பெரும் சறுக்கலில் முடிந்தது. பொதுமக்கள் பெரும்பாலும் இன்றைய கதவடைப்புக்கு ஆதரவளிக்கவில்லை.
எனினும், இலங்கை தமிழ் அரசு கட்சி உள்ளூராட்சி அதிகாரத்தில் உள்ள பிரதேசங்கள் சிலவற்றில் வர்த்தகர்கள் மிரட்டப்பட்டு, கடைகள் பூட்டப்பட்டன. எனினும், பொதுமக்களின் எதிர்ப்பையடுத்து சிறிது நேரத்தில் கடைகள் திறக்கப்பட்டன.
மட்டக்களப்பு
இன்று காலையில் மட்டக்களப்பு நகரிலுள்ள கடைகள் பூட்டப்பட்டிருந்த புகைப்படங்கள் சுமந்திரனாலும், அவரது ஆதரவாளர்களாலும் பகிரப்பட்டிருந்தது.
எனினும், சிறிதுநேரத்திலேயே மட்டக்களப்பு மாநகரசபையினால் மிரட்டப்பட்டு, கடைகள் பூட்டப்பட்டிருந்த தகவல் வெளியானது. மட்டக்களப்பு மாநகர முதல்வரும், பிரதி முதல்வரும் மிரட்டி கடைகளை பூட்ட வைத்ததற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த வீடியோக்கள் வெளியாகியிருந்தன.
கடைகளை பூட்டாவிட்டால் அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வேன் என மட்டக்களப்பு மாநகர முதல்வர் மிரட்டல் விடுத்து கடைகளை பூட்ட வைத்ததற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
வடக்கிலும் மிரட்டல்
இன்று கடைகளை பூட்டாவிட்டால் சுகாதார பிரிசோதகர்கள் மூலம் நடவடிக்கையெடுப்பதாக சில பிரதேசசபை தவிசாளர்கள் மிரட்டல் விடுத்திருந்ததாக நேற்றே சில வர்த்தகர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தனர்.
கரவெட்டி பிரதேசசபையினர், நெல்லியடி நகர வர்த்தக நிலையங்களை பூட்டுமாறு நேற்று மாலை அறிவித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர். பிரதேசசபையுடன் முரண்பட்டால் வர்த்தகத்தில் நெருக்கடியை சந்திக்க வேண்டுமென்பதால் காலையில் சிறிது நேரம் கடைகளை பூட்டியதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
அதையும் மீறி திறந்திருந்த கடைகளிற்கு சென்ற இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்கள், கடைகளை பூட்டுமாறு மிரட்டியதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
மணி அணி அடாவடி… பொலிசாரின் உதவியை நாடிய வர்த்தகர்கள்
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இன்று காலையில் வர்த்தகர்கள் வழக்கம் போல கடைகளை திறந்தனர். சிறிதுநேரத்தில் நல்லூர் பிரதேசசபை தவிசாளர் மயூரன் மற்றும் சிலர் வந்து கடைகளை பூட்டுமாறு மிரட்டலில் ஈடுபட்டனர். மயூரன், மணிவண்ணன் அணியை சேர்ந்தவர். எனினும், தமிழரசு கட்சியின் ஆதரவுடன் நல்லூர் பிரதேசசபை தவிசாளராக உள்ளார்.
இந்த மிரட்டலையடுத்து வர்த்தகர்கள் சிலர் யாழ்ப்பாணம் பொலிசாருக்கு தொலைபேசி வழியாக முறையிட்டனர். எனினும், பொலிசார் சம்பவ இடத்துக்கு வரவில்லையென வர்த்தகர்கள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து வர்த்தகர்கள் சிலர் கடைகளை பூட்டினர். சிலர் திறந்திருந்தனர்.




