முத்தையன்கட்டு பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவத்தை தொடர்ந்து 18 ஆம் ஆம் திகதி வடக்கு கிழக்கு முழுவதும் கதவடைப்பு போராட்டத்தை மேற்கொள்ளுமாறு தமிழரசு கட்சியின் சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். உண்மையிலேயே இந்த கதவடைப்பு போராட்டம் தேவையற்றது. முத்தையன்கட்டு உரியிழப்புக்கு பின்னர் என்னென்ன சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட
வேண்டுமோ அவை அனைத்தும் நீதியான முறையில் இடம்பெற்று வருகிறது இந்த நிலையில் இந்த கதவடைப்பு என்பது அரசியல் தரப்பினர் இழந்து போன தங்களின் வாக்கு வங்கியை அதிகரிக்கவே மேற்கொள்கின்றனர் என போக்குவரத்து நெடுஞ்சாலைகள், புகையிரத சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல்
ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற இன்று (17) பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-
இந்த கதவடைப்ப என்பது தமிழ் அரசியல்வாதிகள் இன்னும் மாறத் தயாரில்லை என்பதனையே வெளிப்படுத்துகிறது, தமிழ் மக்களின் பிரச்சினைகளை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு இவ்வாறான போராட்டங்கள் தேவைப்படுகின்றன. கடந்த காலங்கனில் நாட்டில் இராணுவ ஆட்சி போன்ற ஆட்சி நிலைமை காணப்பட்டது ஆனால் இப்போது அப்படியல்ல, இந்த நாட்டில் இன மத மொழி
ரீதியான வேறுபாடுகளை கடந்து தேசிய ஒற்றுமை உருவாக்கும் நடவடிக்கைளை நாம் முன்னெடுத்துள்ளோம்.
முத்தையன்கட்டு சம்பவம் கூட தமிழ் இளைஞன் என்ற
காரணத்திற்காக இடம்பெற்றது அல்ல அது நாட்டில் ஏனைய பிரதேசங்களில் இடம்பெறும் சம்பவங்கள் போன்றதே.
இந்த கதவடைப்பினை வர்த்தகர்களும் பெரும்பாலான தமிழ் மக்களும் நிராகரித்துள்ளனர். ஆனாலும் சில வர்த்தர்கள் தங்களின் சங்கங்கள் எடுக்கும் தீர்மானத்திற்கு கட்டுப்பட வேண்டியவர்களாக உள்ளனர் எனவும் தெரிவித்தார்.
-மு.தமிழ்ச்செல்வன்-



