முல்லைத்தீவு இளைஞன் மரணத்தின் பின்னணி ஓரளவு தெளிவடைந்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
முல்லைத்தீவு இளைஞன் மரணத்துக்கு இராணுவமே காரணமென குறிப்பிட்டு, இராணுவ பிரசன்னத்துக்கு எதிராக வடக்கு கிழக்கு தழுவிய கதவடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு-
முத்தையன்கட்டு குளத்தில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்தினம் 5 பேர் இராணுவ முகாமுக்குள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அதில் நால்வர் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில், அவரது உடல்தான் குளத்தில் வீசப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
வெளியே வந்தவர்களிடத்திலிருந்து அறிந்த விபரங்களின்படி, மிக மோசமாக இராணுவத்தினர் தங்களை தாக்கியதாக சொல்லியிருக்கிறார்கள். அப்படியாக தாக்கப்பட்டு, இராணுவத்தினரால் அடித்துக் கொல்லப்பட்டவரின் சடலம்தான் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் சம்பந்தமாக உடனடியான விசாரணை நடத்தப்பட வேண்டும், பொறுப்பானவர்கள் உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியிருந்தோம். நேற்றைய தினமே சில இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு, 3 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பொலிசாரின் நடவடிக்கையில் எந்த வித தலையீடுமின்றி செயற்பட வேண்டும்.
ஒரு சம்பவம் நடந்த பின் அது விசாரிக்கப்பட வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென சொல்வதில் பலனில்லை. மிக மோசமாக வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ முகாம்கள் என்னவிதமாக அங்கிருப்பவர்கள் எப்படி செயற்படுகிறார்கள், மக்களை எப்படி பயன்படுத்துகிறார்கள், எப்படி வன்முறையை பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு இது நல்லதொரு எடுத்துக்காட்டு.
செம்மணியில் மனித புதைகுழியின் சிறிய துண்டிலேயே 141 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. பல வருடங்களின் முன் இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் என இப்பொழுது எல்லோருக்கும் தெரிய வருகிறது.
இராணுவம் வடக்கு கிழக்கில் தொடர்ந்து நிலைகொண்டிருப்பதற்கும், அதனால் ஏற்படும் பாதிப்புக்களையும் வன்மையாக கண்டிப்பதுடன், இராணுவப் பிரசன்னத்துக்கு எதிராக வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் 15ஆம் திகதி கதவடைப்பு போராட்டத்தை நடத்தவுள்ளோம். 15ஆம் திகதி அனைத்து நடவடிக்கைகளையும் முடக்கி, வடக்கு கிழக்கை முழுமையாக முடக்க கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.



