முல்லைத்தீவு, முத்தையன்கட்டு குளத்திற்கு அருகிலுள்ள இராணுவ முகாமிற்குள் நுழைந்து தகரம் எடுக்க முயன்ற போது, இராணுவத்தினரால் தாக்கப்பட்டு, தப்பியோடிய பின்னர் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தரின் உடல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது.
இன்று (10) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரி செ.பிரணவன் தலைமையிலான குழுவினரால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முத்துஐயன்கட்டு, இடதுகரை, ஜீவநகரை சேர்ந்த 5 பேர், 7ஆம் திகதி இராணுவ முகாமுக்கு சென்றனர். அவர்களை இராணுவத்தினர் கண்டு, பிடித்து தாக்க முற்பட்ட போது, 5 பேரும் தப்பியோடினர். ஒருவர் இராணுவத்தினரால் தாக்கப்பட்டதுடன், இராணுவ முள்வேலியில் சிக்கி காயமடைந்து முல்லைத்தீவு பொதுவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
காணாமல் போன எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் (வயது 32) என்பவர் நேற்று (9) குளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடலில் வெளிப்படையான காயங்கள் எதுவும் தென்படாத நிலையில் , அவரது மரணத்திற்கான காரணத்தை தீர்மானிக்க, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி பிரேத பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது.
இன்று நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் வெளிப்படையான தீர்ப்பு வழங்கப்பட்டது.
இன்று, உயிரிழந்தவரின் உடல் மீதான பிரேதபரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது, வைத்தியசாலைக்குள் நின்று ஊடகங்களுக்கு பேட்டியளித்த உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் சிலர், இளைஞனின் உடலில் பாரதூரமான காயங்கள் காணப்படுவதாக குறிப்பிட்டிருந்தனர். எனினும், அவ்வாறான- உயிராபத்தை ஏற்படுத்தும் காயங்கள்- உடலில் தென்படவில்லையென வைத்திய அறிக்கை உறுதிசெய்துள்ளதாகவும், பிரேத பரிசோதனையின் போது குடும்ப உறுப்பினர்களையும் வைத்தியர்கள் அழைத்து சடலத்தை காண்பித்து, அவ்வாறான காயங்கள் இல்லையென்பதை உறுதிசெய்ததாகவும், ஸ்கான் பரிசோதனை அறிக்கைகளும் காண்பிக்கப்பட்டதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தன.



