வெளிநாடு செல்வதற்காக ஆபிரிக்காவில் தங்கியிருந்து விட்டு யாழ்ப்பாணம் திரும்பிய இருவர், இந்த வாரம் மலேரியா தொற்றுக்குள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஐரோப்பியாவிற்குள் தஞ்சம் புகுவதற்காக டோஹா நாட்டிற்கு கடந்த வருடம் செப்ரெம்பர் மாதம் சென்ற, நெடுந்தீவை சேர்ந்த 38 வயதான ஒருவர், அந்த முயற்சி வெற்றியளிக்காமல், கடந்த ஜூலை மாத இறுதியில் இலங்கைக்கு திரும்பியுள்ளார்.
கடந்த 4ஆம் திகதி அவர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவர் மலேரியா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டது.
அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு, உடலிலுள்ள மலேரியா கிருமிகள் அழிக்கப்பட்ட போதும், வேறு நோய்கள் காரணமாக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருடன் அல்லைப்பிட்டியை சேர்ந்த மற்றொரு இளைஞனும் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தது தெரிய வந்ததையடுத்து, அவரது வீட்டுக்கு சென்ற சுகாதார உத்தியோகத்தர்கள், அவரை பரிசோதித்ததில், அவரும் மலேரியா கிருமியின் தொற்றுக்குள்ளாகியிருந்தது கண்டறியப்பட்டது.
அவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டார்.
இவர்கள் இருவரின் வீடுகளை சுற்றியுள்ள பகுதிகளில் புகை தெளிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன், பூச்சியியல் பிரிவினர் பரிசோதனையும் மேற்கொண்டுள்ளனர்.
மலேரியா அபாயமுள்ள நாடுகளுக்கு செல்பவர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, யாழ்ப்பாணம்- பண்ணையிலுள்ள மலேரியா தடுப்பு பிரிவுக்கு சென்று, அதற்கான தடுப்பு மாத்திரைகளை பெற்று பலனடையலாமென அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மலேரியா அபாயமுள்ள நாடுகளிலிருந்து திரும்பி வந்தவர்களும், தம்மை பரிசோதிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மலேரியா நோய் அழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. எனினும், வெளிநாடு செல்பவதற்காக ஆபிரிக்க நாடுகளில் தங்கியிருந்து விட்டு, அந்த முயற்சி வெற்றியடையாமல் திரும்பி வருபவர்களால் இலங்கையில்- குறிப்பாக யாழ்ப்பாணத்தில்- மலேரியா நோயுடன் சிலர் அடையாளம் காணப்பட்டு வருகிறார்கள். இந்த வருடம் 5 பேர் இவ்விதம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.



