ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தால் 80 வயது மூதாட்டி ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (18) ரத்து செய்துள்ளது.
ஹம்பாந்தோட்டை, மோதரபில்லுவில் 1993ஆம் ஆண்டு ஒருவரைக் கொன்ற வழக்கில் சிறிமா எதிரிசூரியா என்ற பெண் மேலும் இரண்டு பேருடன் சேர்ந்து ஆரம்பத்தில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார். 1999 இல் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், பல தசாப்தங்களாக தாமதங்கள், மறுவிசாரணைகள் மற்றும் சக குற்றவாளிகளின் இறப்புகள் நிகழ்ந்தன.
சட்டமா அதிபர் ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தில் பிரதிவாதிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இவ்வழக்கு விசாரணையின் முடிவில், 2023ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக மூதாட்டி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவைப் பரிசீலித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், பிரதிவாதிக்கு எதிராக வழங்கப்பட்ட சாட்சியங்களில் முரண்பாடுகள் இருப்பதாகவும், அவை தெளிவற்றவையாகவும் உள்ளதாக சுட்டிக்காட்டியது.
அதன்படி, மரண தண்டனையை உறுதிப்படுத்த போதுமான ஆதாரங்கள் இல்லாததால், மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.




