மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையின் தவிசாளராக கிழக்கு தமிழர் கூட்டமைப்பைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் தெரிவானார். பிரதி தவிசாளராக இலங்கை தமிழரசு கட்சியைச் சேர்ந்த சண்முகநாதன் ரசிகரன் தெரிவு செய்யப்பட்டார்.
பிரதேச சபை மண்டபத்தில் இன்று கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எல்.முகமட் அஸ்மி முன்னிலையில் சபை தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவு இரகசிய முறையில் நடைபெற்றது.
வாகரை பிரதேச சபையில் கிழக்கு தமிழர் கூட்டமைப்பு -7, இலங்கை தமிழரசு கட்சி-6, தேசிய மக்கள் சக்தி-3, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-2, ஜக்கிய மக்கள் சக்தி-1 என 19 உறுப்பினர்கள் அங்கத்துவம் பெறுகின்றனர்.
இதன்போது, தவிசாளரைத்தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இலங்கை தமிழ் அரசு கட்சியைச்சேர்ந்த பல்கோஸ் மோகனராசா முன்மொழிந்து வழிமொழியப்பட, இன்னுமொரு தெரிவாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியைச்சேர்ந்த கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் முன்மொழியப்பட்டார்
இதன் பிரகாரம் தவிசாளர் தெரிவு இரகசிய முறையில் நடத்த வேண்டுமென உள்ளூராட்சி ஆணையாளரினால் உறுப்பினர்களிடம் கோரப்பட்டது. திறந்த வாக்கெடுப்பு நடத்துவதற்கு இலங்கை தமிழ் அரசு கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட 8 உறுப்பினர்களும், ஏனைய 11 உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்புக்கும் ஆதரவு தெரிவித்தனர்.
இதையடுத்து நடந்த இரகசிய வாக்கெடுப்பில் தவிசாளராகப் போட்டியிட்ட பல்கோஸ் மோகனராசாக்கு 7உறுப்பினர்களும், கதிர்காமத்தம்பி தெய்வேந்திரனுக்கு 12 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
இதன் போது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியைச்சேர்ந்த தவிசாளராகப்போட்டியிட்ட கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் தவிசாளராகத்தெரிவு செய்யப்பட்டார்.
அதையடுத்து பிரதித்தவிசாளர் தெரிவுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன்போது தமிழரசுக்கட்சியைச் சேர்ந்த சன்முகநாதன் ரசிகரன் முன்மொழியப்பட்டு, வழிமொழியப்பட இன்னுமொரு தெரிவாக ஐக்கிய மக்கள் சத்திய சேர்ந்த மொஹமட் புகாரி மொஹமெட் ஹைதர் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டிருந்தார்.
இரசிய வாக்கெடுப்பு முறையிலேயே பிரதித்தவிசாளர் தெரிவும் இடம் பெற்றது.
இதில் சண்முகநாதன் ரசிகரனுக்கு ஆதரவாக 10 வாக்குகளும் மொஹமெட் ஹைதர் அவர்களுக்கு ஆதரவாக 8 வாக்குகளும் கிடைக்கப்பெற்றது.




