கிளிநொச்சி, பூநகரி- முழங்காவில் பகுதியினில் அரச காணிகளை இரவோடிரவாக சட்டவிரோதமாக பிடித்து கடைகளை நிர்மாணித்து வருபவர்களிற்கு எதிராக பூநகரி பிரதேசசெயலகம் சட்டநடவடிக்கையில் இறங்கியுள்ளது.
எனினும், யாழ் மாவட்ட தேசிய மக்கள் சக்தி அதிகார பீடம், பூநகரி பிரதேச சபைக்கு அபகீர்த்தி ஏற்படுத்த முயல்வதாக கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த பின்னணியில், சட்டவிரோத காணி பிடிப்பவர்கள் தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
பூநகரி முழங்காவில் பகுதியில் நாச்சிக்குடா சந்தியை அண்மித்து மன்னார் – யாழ்ப்பாணம் வீதியோரமாக அரச காணிகளில் நேற்றுமுன்தினமிரவு முதல் திடீரென சில கடைகள் முளைத்துள்ளன.
நிரந்தரமாக இரும்பினால் ஒட்டப்பட்டதும் தகரங்களால் வேயப்பட்டதுமானதாக அக்கடைகள், அந்த பகுதியில் வைத்து பொருத்தப்படவில்லை. வேறெங்கோ தயார் செய்யப்பட்டு, இரவிரவாக அங்கு இறக்கப்பட்டு, காணி அபகரிக்கப்பட்டுள்ளது.
இந்த காணிகள் முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால், அவரது ஆதரவாளர்களுக்கு பகிர்ந்தளிக்க தயார் செய்யப்பட்டதாகவும், எனினும், ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததால் அது கைவிடப்பட்டதாகவும் சில தரப்புக்கள் கூறுகின்றன. அந்த காணிகளிலேயே திடீர் கடைகள் முளைத்துள்ளன.
பொதுப்போக்குவரத்திற்கு அபாயத்தை தரக்கூடியதும் அனுமதியற்றதுமான கட்டுமானங்களை தயவு தாட்சணியமின்றி அகற்ற வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ள நிலையில் அவை தொடர்பில் பொதுமக்களால் முறைப்பாடுகள் பூநகரி பிரதேசசபைக்கு செய்யப்பட்டுள்ளது.
அதனையடுத்து பூநகரி பிரதேசசபை செயலாளர் மற்றும் வருமான வரிபரிசோதகர் நிலைய பொறுப்பதிகாரி சகிதம் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். உரிமை கோரப்படாத நிரந்தர தகரக்கொட்டகைக்கு பகிரங்கமாக அகற்றுவதற்கான எச்சரிக்கை அறிவித்தல்களை ஒட்டிய அதிகாரிகள் அருகாக தொடர்ந்து நிர்மாண வேலையில் ஈடுபட்டிருந்த மற்றைய வர்த்தக நிலையத்தினரிடம் அனுமதியை பெற்று வேலையை முன்னெடுக்க கோரியிருந்தனர். அத்துடன் சம்பவ இடத்தை புகைப்பட ஆதாரப்படுத்த முயன்றனர்.
இதன்போது, அங்கிருந்த கும்பலொன்று புகைப்படமெடுக்க முற்பட்டவர்களை கொட்டனால் தாக்க முற்பட்டதுடன், கைத்தொலைபேசியை பறிக்கவும் முற்பட்டுள்ளது.
இதையடுத்து, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுமாறு குறிப்பிட்டு, அவற்றை பிடுங்கப் போவதாக பிரதேசசபை செயலாளர் குறிப்பிட்டார். அந்த சமயத்தை மட்டும் படமாக்கிய சட்டவிரோத காணி பிடிப்பாளர்களின் வீடியோக்கள், தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களால் உடனடியாக பகிரப்பட்டது பரவலாக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டவிரோத காணி பிடிப்பாளர்கள் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் என்ற குற்றச்சாட்டு பிரதேசத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் காணி அமைந்துள்ள பகுதியை சேர்ந்தவர்களும் அல்லர். 5 கி.மீ தொலைவில் உள்ளவர்கள்.
சட்டவிரோதமாக இப்படி காணி பிடித்து, தமது ஆளுகைக்குட்பட்ட காணியென்ற ஆவணத்தை பெற்று, பின்னர் அந்த கடைகளை குத்தகைக்கு கொடுப்பதே பலர் கைக்கொள்ளும் உத்தியென்கிறார்கள் பிரதேசவாசிகள்.
சட்டவிரோத காணி பிடிப்பாளர்கள் தாக்க முற்பட்டதையடுத்து, பூநகரி பிரதேசசபையினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திலிருந்தவர்களை பொலிசார் காவல்நிலையத்திற்கு அள்ளிச் சென்றனர். அவர்களை விசாரணை செய்து, கைது செய்ய தயாரான சமயத்தில், பூநகரி பிரதேசசபை செயலாளர் அதனை மறுதலித்து, சட்டவிரோத கட்டுமானங்களை முன்னெடுக்க வேண்டாமெனவும் உரிய அனுமதியை பெற்ற பின்னர் பணிகளை முன்னெடுக்கலாமெனவும் அந்த குழுவினருக்கு அறிவுரை கூறுமாறும் தெரிவித்துள்ளார்.
பின்னர், அந்த குழுவினர் பொலிசாரால் அறிவுரை கூறப்பட்டு, விடுவிக்கப்பட்டனர்.
சட்டவிரோதமாக காணி பிடிக்க முற்பட்டு, அதை தடுக்க முயன்ற அரச உத்தியோகத்தர்களை தாக்க முற்பட்டவர்கள் தேசிய மக்கள் சக்தியின் உள்ளுர் தலைவர் தலைமையிலான குண்டர் குழுவென பிரதேசவாசிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பூநகரி பிரதேசசபையினர் சட்டவிரோத கடைகளை அகற்றுமாறு குறிப்பிட்ட போது, அங்கு அடாவடியில் ஈடுபட்ட கும்பல், “இப்பொழுது நாங்கள் யாரென காட்டுகிறோம்“ என பகிரங்கமாக மிரட்டல் விடுப்பதும், சற்று தொலைவில் சென்று தமது தொலைபேசிகளூடாக யாருடனோ பேசுவதும் காணொளிகளில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் குண்டர்களால் எடுக்கப்பட்ட கைத்தொலைபேசி வீடியோக்களை தனது முகநூலில் பகிர்ந்து அதிகாரிகள் அடாவடியென பகிர்ந்து கொள்ள, மறுபுறம் தாக்குதல் நடத்த முற்பட்ட குண்டர் கும்பலோ அதிகாரிகளை தாம் நையப்புடைத்து கலைத்தாக முகநூலில் தகவல் பகிர்ந்துள்ளனர்.
இதேவேளை, பூநகரி பிரதேசசபை செயலாளருக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்துடன், யாழிலுள்ள ஜேவிபியினர் பூநகரி பிரதேசசபை செயலாளர் அடாவடியென தாம் பகிர்ந்த வீடியோக்களை, வடக்கு ஆளுனர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் உள்ளிட்ட தரப்புக்களும் அனுப்பியுள்ளனர்.
இதுதவிர, ஜேவிபியினரால் யாழில் நிர்வகிக்கப்படும் இணையத்தளங்களும் இந்த சம்பவத்தை திரித்து, அதிகாரிகள் அடாவடியென தகவல் பரப்ப முயன்றுள்ளன.



