இலங்கை தமிழ் அரசு கட்சியின் கரைச்சி மற்றும் பூநகரி பிரதேசசபை தவிசாளர்கள் நியமனத்தில் ஏற்பட்ட இழுபறி இன்று சுமுகமாக தீர்க்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கும், கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுக்குமிடையிலான தகராறு காரணமாக, இரண்டு சபைகளுக்குமான தவிசாளர்களை உறுதி செய்து கையொப்பமிட சுமந்திரன் மறுத்திருந்தார்.
எனினும், இன்று கையொப்பமிட்டுள்ளார்.
உள்ளூராட்சிசபை விதிகளின்படி, சபையொன்றில் ஏதேனுமொரு கட்சி 50 வீதம் அல்லது அதற்கு மேற்பட்ட ஆசனங்களை கைப்பற்றினால், அந்த கட்சி தவிசாளரை நியமிக்கலாம். அங்கு வாக்கெடுப்பு நடக்காது. கட்சியின் செயலாளர், சபை தவிசாளரை உறுதி செய்து தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்ப வேண்டும். மாகாணசபையிலும் இதுதான் நடைமுறை.
கிளநொச்சியின் கரைச்சி மற்றும் பூநகரி பிரதேசசபைகளில் இலங்கை தமிழ் அரசு கட்சி அறுதிப்பெரும்பான்மை பெற்றிருந்தது.
கரைச்சியில் வேழமாலிகிதனையும், பூநகரியில் ரஞ்சனையும் தவிசாளர்களாக நியமிப்பதென சிறிதரன் தலைமையில் கூடிய, கட்சியின் மாவட்ட கிளையில் முடிவு செய்யப்பட்டது.
இதற்கான ஆவணங்கள் கட்சியின் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்துக்கு அனுப்பப்பட்டிருந்தது.
இதற்குள், யாழ்ப்பாணத்திலிருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சியொன்றுக்கு பேட்டியளித்த சி.சிறிதரன், “எம்.ஏ.சுமந்திரனை கட்சியின் பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்ளவில்லை“ என தெரிவித்திருந்தார். இந்த கருத்தால் சுமந்திரன் கொதிப்படைந்துள்ளார்.
கரைச்சி, பூநகரி தவிசாளர்களை அங்கீகரிக்கும் ஆவணங்களில் கையெழுத்திடுவதை தாமதப்படுத்திய சுமந்திரன், தவிசாளர்களாக நியமிக்கப்படவிருந்த இருவரையும் தனித்தனியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சம்பந்தப்பட்ட ஆவணங்களில் தான் கையெழுத்திட மாட்டேன் என்றும், சி.சிறிதரன் தன்னை செயலாளராக ஏற்கவில்லையென்றால், ஏன் நான் கையெழுத்திட வேண்டுமென்றும் கேட்டிருந்தார்.
சுமந்திரன் அனேகமாக இன்று இரவு அளவில் வெளிநாட்டு பயணமொன்றை மேற்கொள்கிறார். அவர் நாடு திரும்ப சில நாட்களாகும். இதற்குள், தவிசாளர்களை உறுதி செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கிய அவகாசம் முடிவடைந்து விடும்.
சிறிதரன்- சுமந்திரன் தகராற்றினால் கரைச்சி, பூநகரி சபைகளின் தவிசாளர்கள் நியமனம் சிக்கலாகும் அபாயம் காணப்பட்டது.
இந்த நிலையில், கட்சியின் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் இந்த விவகாரத்தில் தலையிட்டு, நிலைமையை சுமுகமாக்கியுள்ளார்.
தொலைக்காட்சி பேட்டி தொடர்பில் சி.சிறிதரனிடமும் அவர் விளக்கம் கோரியுள்ளார். கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போது அப்படி கூறியதாகவும், செயலாளர் தெரிவின் போதே அதை தான் எதிர்த்து வாக்களித்ததாகவும், அந்த அடிப்படையில் பதிலளித்ததாகவும் சிறிதரன் விளக்கமளித்துள்ளார்.
சிறிதரன் அங்கீகரிக்காவிட்டாலும், கட்சியின் செயலாளர் சுமந்திரன்தான் என்பதை குறிப்பிட்டு, அவரை கையெழுத்திடுமாறும் சீ.வீ.கே. குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில் இன்று சம்மந்தப்பட்ட ஆவணங்களில் கையெழுத்திட்ட சுமந்திரன், அதை தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஒப்படைக்கவும் ஏற்பாடு செய்துள்ளார்.



