‘ஃபேஸ்புக்’ மூலம் நடுத்தர வயது ஆண்களுடன் அறிமுகத்தை ஏற்படுத்தி, பின்னர் ‘வட்ஸ்அப்’ மற்றும் ‘மெசஞ்சர்’ மூலம் அவர்களுடன் அரட்டை அடித்து, போலி காதல் உறவுகளை ஏற்படுத்தி, அந்த ஆண்களை மிஹிந்தலை பகுதிக்கு அழைத்து, காட்டுப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று, மரங்களில் கட்டி வைத்து, அடித்து, அவர்களின் மோட்டார் சைக்கிள்கள், பணம் மற்றும் பிற சொத்துக்களைக் கொள்ளையடித்த ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ஒரு பெண்ணும் மூன்று ஆண்களும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள், நான்கு மொபைல் போன்கள் மற்றும் பிற சொத்துக்களுடன் கைது செய்யப்பட்டதாக மிஹிந்தலை பொலிசார் தெரிவித்தனர்.
இந்த குழுவினர் கொள்ளையடித்த பொருட்களின் பெறுமதி ஒரு கோடி ரூபாய்க்கு மேல் என தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் கெக்கிராவ பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் ஒருவரும், அனுராதபுரத்தின், அசோகபுர, விஜயபுர மற்றும் கெக்கிராவ பகுதிகளைச் சேர்ந்த 21, 27 மற்றும் 32 வயதுடைய மூன்று ஆண்களும் ஆவர்.
மினுவாங்கொடை மற்றும் அவுகானை பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனது காதலி மிஹிந்தலை நகரத்திற்கு வருமாறு அழைத்ததாகவும், அங்கு சென்ற பிறகு, காதலியும் ஒரு குழுவினரும் அவரைத் தாக்கி, மரத்தில் கட்டி வைத்து, அவரது மோட்டார் சைக்கிள், பணம், மொபைல் போன்கள் மற்றும் வங்கி அட்டைகளை கொள்ளையடித்துச் சென்றதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவங்களில் உயர் மட்ட வேலைகளில் பணிபுரிந்த ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.