30.6 C
Jaffna
April 10, 2025
Pagetamil
இந்தியா

கச்சத்தீவை மீட்க உடனடி நடவடிக்கை தேவை: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை விரைவில் மறு ஆய்வு செய்து கச்சத்தீவை மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசுமுறைப் பயணமாக இலங்கை செல்லும் பிரதமர் , இலங்கை அரசுடன் பேசி, அந்நாட்டு சிறையில் வாடும் தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து மீட்டுக் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தின் விவரம்: பாக் வளைகுடா பகுதியில் வாழும் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாக்கும் வகையில், கச்சத்தீவை திரும்பப் பெறுவது தொடர்பாக 02.04.2025 அன்று தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தங்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். 1974-ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்தியா-இலங்கை ஒப்பந்தம் (கச்சத்தீவு ஒப்பந்தம்) தான் நீடிக்கும் இப்பிரச்சனைக்கு அடிப்படையாக உள்ளது.

கச்சத்தீவு ஒப்பந்தத்தை ஆரம்பத்திலிருந்தே தமிழக அரசு உறுதியுடன் எதிர்த்து வந்துள்ளது. 1974-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்ததை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அப்போது கடுமையாக எதிர்த்தனர். 28.06.1974 அன்று மத்திய அரசு கச்சத்தீவு ஒப்பந்தத்தில் மாநில அரசின் இசைவின்றி கையெழுத்திட்ட பிறகு, அப்போதைய முதல்வர் கருணாநிதி உடனடியாக மறுநாளே 29.06.1974 அன்று தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றி, அன்றைய தினமே அப்போதைய பிரதமருக்கு கடிதம் எழுதினார்.

அதனைத் தொடர்ந்து, கச்சத்தீவு பிரச்சினையில் மத்திய அரசின் முடிவை வன்மையாக எதிர்த்து தமிழக சட்டப் பேரவையில் 21.08.1974 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாக்க, கச்சத்தீவினை திரும்பப் பெற வேண்டும் என்ற நிலையான கோரிக்கையை வலியுறுத்தி, 03.10.1991, 03.05.2013, 05.12.2014 ஆகிய நாட்களில் தமிழக சட்டப் பேரவை இதே போன்ற தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.

தமிழக மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதாலும், அவர்களது படகுகள் பெருமளவில் பறிமுதல் செய்யப்படுவதாலும், கடலோர மீனவ சமுதாயத்தினரின் வாழ்க்கை மிகுந்த கவலையிலும், துயரத்திலும் ஆழ்ந்துள்ளது. கைது மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளால் மீனவர்களின் வாழ்வாதாரமும் நிலையற்றதாக மாறியுள்ளது. தான் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு தங்களுடன் 17.06.2021 அன்று நடைபெற்ற முதல் சந்திப்பின்போது, இப்பிரச்சினையை தங்களின் கவனத்திற்கு கொண்டு வந்தேன்.

இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற தமிழக அரசின் முந்தைய கோரிக்கைகளை அடுத்தடுத்த சந்திப்பின் போதும் வலியுறுத்தினேன். இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது மற்றும் தாக்கப்படுவது குறித்து 2021-ம் ஆண்டு முதல் வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் தங்களுக்கும் பலமுறை கடிதங்களை எழுதியுள்ளேன். 2024-ம் ஆண்டில், 530 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2025-ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், 147 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களுக்கு அதிகபட்ச சிறைத்தண்டனையும், பெருந்தொகையும் அபராதமாக விதிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்திற்கு விடப்படுகிறது. இலங்கையின் இத்தகைய தீவிர நடவடிக்கைகள் தமிழக மீனவர்களை வறுமையின் விளிம்பு நிலைக்குத் தள்ளியுள்ளதால், இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு ஒரே வழி கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் என்ற தொடர் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை உடனடியாக மறு ஆய்வு செய்து, கச்சத்தீவை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும். அரசுமுறைப் பயணமாக இலங்கை செல்லும் தாங்கள், இலங்கை அரசுடன் பேசி, அந்நாட்டு சிறையில் வாடும் நமது மீனவர்களையும், அவர்களது படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து மீட்டுக் கொண்டுவர வேண்டும். இதை வலியுறுத்தி 02.04.2025 அன்று தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. எனவே, தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிரந்தரமாக பாதுகாக்கும் வகையில், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை விரைவில் மறு ஆய்வு செய்து கச்சத்தீவை மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இதையும் படியுங்கள்

மும்பை தாக்குதல் தீவிரவாதி ராணாவை இந்தியாவிடம் ஒப்படைத்தது அமெரிக்கா: சிறப்பு விமானத்தில் இன்று அழைத்து வரப்படுகிறார்

Pagetamil

தண்​டவாளத்​தில் படுத்து ரீல்ஸ் எடுத்​தவர் கைது

Pagetamil

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார்

Pagetamil

10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல் ‘சட்டவிரோதமானது’ – உச்ச நீதிமன்றம்

Pagetamil

பிக்பாஸ் தர்ஷன் கைது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!