தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் பல்வேறு அரசியல் கட்சிகள் இணைந்து புதிய அரசியல் கூட்டொன்று யாழில் உருவாக்கப்பட்டுள்ளது.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தனித் தனியாகவும் அதேநேரம் புதிய கூட்டுக்களை அமைத்தும் போட்டியிடுகின்றன.
இந் நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள சில சிறிய குழுக்கள் இணைந்து புதிய கூட்டொன்றை உருவாக்கியுள்ளனர்.
இந்தப் புதிய கூட்டானது அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சைக்கில் சின்னத்தில் வடக்கு கிழக்கு முழுவமும் இத் தேர்தலில் போட்டியிடுகின்றது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைமையிலான இந்த கூட்டில் என்.சிறிகாந்தா தலைமையிலான தமிழ்த் தேசிய கட்சி என்ற குழு, தமிழ்த் தேசிய பசுமை இயக்கம், இலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து பிரிந்த கே.வி.தவராசா குழு, தமிழ் மக்கள் கூட்டணியில் இருந்து பிரிந்த அருந்தவபாலன் குழு ஆகிய தரப்புக்கள் அங்கம் வகிக்கின்றன.
இந்தக் கட்சிகள் இணைந்து நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுக்களையும் தாக்கல் செய்துள்ளனர்.
இந்தப் புதிய கூட்டு உருவாக்கம் மற்றும் தேர்தல் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இந்த தரப்புக்கள் ஊடக சந்திப்பை நடாத்தியுள்ளனர்.