அரச சொத்துக்களை நாசம் செய்தல் மற்றும் பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை நேற்று முன்தினம் (19.02.2025) நெல்லியடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
காவல் நிலையம் ஒன்றில் காவல் துறை உத்தியோகத்தராக பணியாற்றி வரும் பெண் ஒருவரின் சகோதரனே இவ்வாறு யாழில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபர், யாழில் ரெலிக்கொம் வயர்களை அறுத்து விற்பனை செய்து வந்தவராக அடையாளங்காணப்பட்டுள்ளார்.
நெல்லியடி பகுதியில் நீண்ட காலமாக ஸ்ரீலங்கா டெலிகாம் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு கேபிள்களை அறுத்து, அவற்றை விற்பனை செய்த குற்றச்சாட்டில் இவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட நபர் மந்துவில் பகுதியைச் சொந்தமாகக் கொண்டவராகவும், நெல்லியடி பொலிஸ் பிரிவில் திருமணம் செய்து கொண்டு வசித்து வருவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், குறித்த நபர் ஏற்கனவே கொடிகாமம் மற்றும் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுகளிலும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்கிறார் எனவும், பொலிஸ் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீலங்கா டெலிகாம் நிறுவனத்திற்குச் சொந்தமான கேபிள்களை நெல்லியடி கரணவாய் பகுதியில் நீண்ட நாட்களாக திருடி, அவற்றை விற்பனை செய்து வந்துள்ளார். இதனால், ஸ்ரீலங்கா டெலிகாம் நிறுவனம் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் 10-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகளை முன்வைத்திருந்தது.
குறித்த நபரை இரகசியமாக தேடிவந்த நெல்லியடி பொலிஸார், அவர் பதுங்கியிருந்த வீட்டை சுற்றிவளைத்து, நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் கைது செய்துள்ளனர்.
மேலும், சந்தேக நபரின் சகோதரி தென்மராட்சி பகுதியில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தேக நபரை பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்திய பொலிஸார், அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



