கிளிநொச்சி ஆசிரியருக்கு பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கொழும்பில் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகவும், அவரிடம் தாம் கோரும் தகவல்களை வழங்காவிட்டால் கைது செய்யப்பட வேண்டி வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
பயங்கரவாத தடுப்புச் சட்டம் (PTA) கவனமாகப் பயன்படுத்தப்படும் என அரசாங்கம் உறுதி அளித்திருந்த போதிலும், கிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஆசிரியர் ஒருவர் மீண்டும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் (CTID) விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி, கோணாவில் மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் இன்னாசிமுத்து சத்தியசீலனிடம், 2024 நவம்பர் 6ம் திகதி பெறப்பட்ட வாக்குமூலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக 2025 பெப்ரவரி 17ம் திகதி காலை 9.30 மணிக்கு கொழும்பு 01இல் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும விசாரணைப் பிரிவுக்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தது.
14 மார்ச் 2024 அன்று, கோணாவில் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின் போது தமிழர்கள் வாழும் பகுதிகளைக் குறிக்கும் வகையிலான இலங்கையின் வரைபடத்தை ஒத்த வடிவமைப்பு ஒன்றின் ஊடாக இல்லம் ஒன்று அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டில் ஈழம் வரைபடம் மற்றும் கனகபுரம் மயானத்தின் வாயிலின் மாதிரியை உருவாக்க உதவிய மாணவர்களின் பெயர்ப் பட்டியலுடன் 2025 பெப்ரவரி 17ம் திகதி பயங்கரவாத தடுப்பு பொலிஸின் தலைமையகத்தில் முன்னிலையாகுமாறு ஆசிரியர் இன்னாசிமுத்து சத்தியசீலனுக்கு பொலிஸார் அனுப்பியுள்ள தகவல் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 20ம் திகதி தாம் கற்பிக்கும் வகுப்பறைக்குள், அனுமதியின்றி நுழைந்த பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் (CTID) அதிகாரிகள் தம்மை விசாரிக்க வேண்டுமெனக் கூறி அச்சுறுத்தியதாக கோணாவில் மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் சத்தியசீலன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
“கொழும்பிற்கு மீண்டும் அழைக்க வேண்டியேற்படும் எனவும், தாம் கோரும் தகவல்களை தர வேண்டும். ஒத்துழைப்பு தர வேண்டும். இல்லையேல் தன்னை கைது செய்ய வேண்டியேற்படும் எனவும் அதிகாரிகள் கூறியதாக ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
மேலும், இதற்கு, குறித்த ஆசிரியர் தான் எந்த குற்றமும் செய்யவில்லை எனவும், ஏதாவது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் தனது அடிப்படை உரிமை மீறப்படும் என முறைப்பாடுகளை செய்ய வேண்டியேற்படும் எனவும், தன்னை பாதுகாக்க சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டியேற்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
14 மார்ச் 2024 அன்று, கோணாவில் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின் போது தமிழர்கள் வாழும் பகுதிகளைக் குறிக்கும் வகையிலான இலங்கையின் வரைபடத்தை ஒத்த வடிவமைப்பு ஒன்றின் ஊடாக இல்லம் ஒன்று அலங்கரிக்கப்பட்டிருந்ததோடு, இதுத் தொடர்பில் கடந்த காலத்தில் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பல தடவைகள் அழைத்த பயங்கரவாத பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை நடத்தியுள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர்.

2024ம் ஆண்டு கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் தலைமையகத்திற்கு தன்னை அழைத்த அதிகாரிகள் 10 மணிநேரம் விசாரணை நடத்தியதாக ஆசிரியர் இன்னாசிமுத்து சத்தியசீலன் சுட்டிக்காட்டுகின்றார்.
விசாரணையின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீளக் கட்டியெழுப்ப முயற்சிக்கின்றீர்களா? என கேள்வி எழுப்பிய பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர், இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியின் போது இலங்கையின் வரைபடத்தில் தமிழர்கள் வாழும் பிரதேசங்களை அடையாளப்படுத்தும் வகையில் இல்லத்தை உருவாக்கிய ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் ஆகியோரின் பெயர் விபரங்களை வழங்குமாறு கோரியதாக அவர் குறிப்பிடுகின்றார்.
எவ்வாறெனினும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரின் பெயர் விபரங்களை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு வழங்க அவர் கடுமையாக மறுத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.



