காட்டு யானைகள் ரயில்களில் மோதுவதால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க அவசர நடவடிக்கைகள் சிலவற்றை எடுக்க அரசினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்ஓயாவிற்கும் ஹிங்குரக்கொடைக்கும் இடையிலான 141வது மைல்கல்லுக்கு அருகில் ரயிலில் மோதி ஆறு காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, பாராளுமன்ற வளாகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் (20) நடைபெற்றது.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், போக்குவரத்து, சுற்றுச்சூழல், டிஜிட்டல் அமைச்சகங்கள், ரயில்வே மற்றும் வனவிலங்கு திணைக்களம் உள்ளிட்ட உயரதிகாரிகள் மற்றும் பல்வேறு சுற்றுச்சூழல், வனவிலங்கு பாதுகாப்பு அமைப்புகள் கலந்துகொண்டன.
காட்டு யானைகள் அதிகம் வரும் பகுதிகளில் ரயில் தண்டவாளங்களை வெளிப்படையாகவும், பாதுகாப்பாகவும் மாற்றுவதற்கான தீர்வுகள் விவாதிக்கப்பட்டன. மேலும், டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முன்னேற்றங்களைச் செய்யவும் கவனம் செலுத்தப்பட்டது.
ரயிலின் முன்னும் பின்னும் வெள்ளை விளக்குகளை நிறுவுவது, மஞ்சள் விளக்குகளை மாற்றுவது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
கலந்துரையாடலின் இரண்டாம் கட்டமாக, நாளை (22) சம்பவ இடத்திற்கு சென்று உயரதிகாரிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நேரில் ஆய்வு நடத்தவுள்ளனர். இதன் பின்னர் மேலும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.



