ரயில் மோதியதில் 5 யானைகள் பலியாகியுள்ள சம்பவம் நேற்றைய தினம் (19) இடம்பெற்றுள்ளது.
இதனால் மட்டக்களப்பு-கொழும்பு ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த மீனகயா ரயில், கல்ஓயா ரயில் நிலையத்திற்கு அருகில், காட்டு யானைக் கூட்டத்துடன் மோதியதில் 5 யானைகள் உயிரிழந்துள்ளன.
அத்தோடு, குறித்த ரயிலின் இயந்திரம் தடம்புரண்டுள்ளதால், மட்டக்களப்பு – கொழும்பு ரயில் போக்குவரத்து சேவை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

காட்டு யானைகளின் பாதையில் அமைந்த புகையிரத பாதை, அவர்களின் இயற்கை வாழ்விடங்களை பாதிக்கின்றது. இதன் காரணமாக, ரயிலின் மோதி யானைகள் உயிரிழக்க நேர்ந்துள்ளது. காட்டு யானைகளின் இருப்பிடத்தின் வழியாக ரயில் பாதை நுழைந்ததாலலே, இந்த துயர சம்பவம் ஏற்பட்டு உள்ளது.
நேற்று (19) இரவு 11.20 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. தடம்புரண்ட ரயிலை மீண்டும் வழமைக்கு கொண்டுவரும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சேவை விரைவில் வழமைக்கு திரும்பும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காட்டு வழியூடாக புகையிரதப் பாதைகள் அமைக்கப்பட்டமையே இவ்வாறான விபத்துக்கள் ஏற்பட காரணமாகும் என சமூகத்தில் பல்வேறு கருத்துக்கள் எழுந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



