முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இரகசியமாக சென்று வருவதாக கூறப்படும் கம்பஹா மாவட்டத்திலுள்ள தியான மையம் தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க குறித்த தியான மைய பகுதிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள முயன்றுள்ளார். எனினும், அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளால் அவர் உள்ளே செல்லவதற்கான அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தியான மையம் தொடர்பாக உள்ளூர்வாசிகள் குழுவிடமிருந்து கிடைத்த தகவலை அடுத்து, பிரதி அமைச்சர் அங்கு சென்று சம்பவத்தை நேரில் கண்டறிய முயன்றதாக கூறப்படுகிறது.
கம்பஹாவின் யகோடா பகுதியில் அமைந்துள்ள இந்த மையத்தில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான தரப்பினர் செயல்பட்டு வருகின்றனர் என்பதற்கான புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக அந்தப் பகுதி மக்கள் ஆளும் தரப்புக்கு முறைப்பாடு செய்ததை அடுத்து, அதனை ஆராயும் நோக்கில் பிரதி அமைச்சர் அங்கு சென்றுள்ளார்.
எனினும், மகிந்த தரப்பினரால் அவருக்கு தியான மையத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், தியான மையம் தொடர்பாக தொடர்ந்தும் புதிய தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.




