கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், 30 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கையடக்க தொலைபேசிகள் மற்றும் டெப்லெட் கணினிகளை சட்டவிரோதமாக கொண்டுவர முயன்ற வர்த்தகர் ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு 13, கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் அடிக்கடி வெளிநாடு சென்று வரும்பவர் என குறிப்பிடப்படுகிறது.
கடந்த பெப்ரவரி 1ம் திகதி மாலை 4.30 மணிக்கு கட்டார் ஏர்வேஸ் விமானம் QR-654 மூலம் இலங்கைக்கு வந்த அவர், தனது பொருட்களை அதே விமானத்தில் கொண்டு வரவில்லை. பின்னர், தனி விமானம் மூலம் பொருட்கள் சுங்க திணைக்களத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், நேற்று அவற்றைப் பெற்றுக்கொள்ள குறித்த நபர் சென்றபோது அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இச் சோதனையின் போது, அவரது பொருட்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 180 உயர் தர கையடக்க தொலைபேசிகள் மற்றும் 5 டெப்லெட் கணினிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனையடுத்து, சுங்க அதிகாரிகளால் குறித்த நபர் கைது செய்யப்பட்டு, இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதால், குறித்த வர்த்தகர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.