கொழும்பு விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டு பெண் திடீரென உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் கொழும்பு கொள்ளுப்பிட்டி ஆர்.ஏ. டி மெல் மாவத்தையில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த மூன்று வெளிநாட்டு குடிமக்கள் திடீர் சுகயீனமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அதில் ஒருவர் மாத்திரமே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 24 வயதுடைய பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த பெண் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்றைய இருவரும் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த தம்பதியினர் எனவும், அவர்கள் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.
இந்த திடீர் உடல்நலக் குறைவிற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை, அதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இறந்த நபர் வாந்தி அறிகுறிகளுடன் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார் என்பதை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
சம்பவத்தைத் தொடர்ந்து, கட்டிடத்தை காலி செய்து, பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்த அறைக்கு சீல் வைத்தனர்.