உடப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகொலன்யா பகுதியில் மகனால் தந்தை கொல்லப்பட்ட சம்பவம் நேற்று (01) பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் உடப்புவ ஆதிமுன்னை சேர்ந்த 63 வயது நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பெரியகொலன்யா பகுதியில் உள்ள வீட்டில் தங்கியிருந்த அவர், சுகவீனம் காரணமாக உடப்புவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக முதலில் முறைப்பாடு செய்யப்பட்டது. எனினும், சட்ட வைத்தியர் பரிசோதனை மேற்கொண்டபோது, இது சந்தேக மரணம் என்பதால் நீதவான் விசாரணை தேவை என தெரிவிக்கப்பட்டது.
மேலதிக விசாரணையில், உயிரிழந்தவரின் மகன் உறங்கிக் கொண்டிருந்த தந்தையின் மார்பில் கத்தியால் குத்தியதால் அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
மேலும், சந்தேகநபரான குறித்த மகன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதோடு, அன்று தனது சிகிச்சைக்காக தந்தை வராததால் ஏற்பட்ட கோபத்தில் அவர் தந்தையை கத்தியால் குத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்தது.
உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், குற்றத்தில் ஈடுபட்ட 20 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட மகன் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக உடப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.