முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் மியன்மார் நாட்டு பயணிகள் சுமார் 103 பேர் அடங்கிய நாட்டுப்படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
குறித்த கப்பலில் பெண்கள், சிறுவர்களும் வயோதிபர்களும் உள்ளடங்கியிருக்கின்றனர்.
குறித்த கப்பலில் இருப்பவர்களுக்கு உணவுகள், உலருணவுகளை முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர் வழங்கியிருக்கின்றார்கள், அதில் சிலர் மயக்கநிலையிலும், சுகவீனமுற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மியன்மாரிலிருந்து புறப்பட்ட பின்னர் போக்கிடம் இல்லாமலும், படகில் உணவு, குடிதண்ணீர் தீர்ந்த நிலையிலும், அவர்கள் முள்ளிவாய்க்காலில் கரையொதுங்கியுள்ளனர்.
மியன்மாரில் ரோஹிங்கியா இன சிறுபான்மை முஸ்லிம் மக்கள் அந்த நாட்டு அரசாங்கத்தால் இனஅழிப்பிற்கு உட்பட்டுள்ள நிலையில், அவர்களில் பெரும் எண்ணிக்கையானவர்கள் அயல்நாடான பங்களாதேசில் தஞ்சமடைந்துள்ளனர். அங்கிருந்து ஆபத்தான கடல் பயணங்களின் மூலம் இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிற்கு செல்வது வழக்கம். இவ்வாறு பயணித்த படகொன்று சிறிது காலத்தின் முன்னரும் முள்ளிவாய்க்காலில் கரையொதுங்கியிருந்தது.
தற்போது கரையொதுங்கியுள்ளவர்களை திருகோணமலையில் இருந்து கடற்ப்படை படகு ஒன்று வருகைதந்து அங்கு மீட்டுச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.