மட்டக்களப்பு சிறுவர் பேரவையின் உறுப்பினர்களுக்கான வதிவிடத் திறன் விருத்தி செயலமர்வின் ஆரம்ப நிகழ்வு இன்று 17.12.2024 செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சிறுவர்கள் தமது உரிமைகளை தாம் அறிந்து கொண்டு, தாமாகவே தம்மை உடல் உள ரீதியாக வலுப்படுத்தும் நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்ட மூன்று நாள் செயலமர்வின் ஆரம்ப நிகழ்வு இன்று தன்னாமுனை மியாமி மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட செயலாளருமான ஜஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.
மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஜீ. பிரணவன் தலைமையில் மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் தி. மதிராஜின் ஏற்பாட்டில் இடம் பெற்ற செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இருந்து சிறுவர் சபை உறுப்பினர்கள் பயனாளிகளாக கலந்து கொண்டிருந்தனர்.
செரி நிறுவனத்தின் அனுசரணையுடன் இடம்பெற்று வரும் குறித்த செயலமர்வில் நிறுவனத்தின் இலங்கைக்கான தேசிய பணிப்பாளர் வீ. ஈ. தர்சன், செரி நிறுவனத்தின் மாகாண பணிப்பாளர் எஸ். பகீரதன், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் விளையாட்டு உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




