முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை அரசியலமைப்பு பேரவையின் உறுப்புரிமையிலிருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நீக்கியுள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீக்கம் செய்யப்பட்ட நிமல் சிறிபால டி சில்வாவிற்கு பதிலாக அரசியலமைப்பு பேரவையில் ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் அடுத்த பாராளுமன்றம் கூடும் வரை சபாநாயகர் தலைமையில் அரசியலமைப்பு பேரவை செயற்பட வேண்டும்.
தற்போதைய நிலவரப்படி, அரசியலமைப்பு பேரவையின் தலைவராக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தொடர்ந்தும் செயற்படுகிறார்.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, அமைச்சர் விஜித ஹேரத், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளான கலாநிதி பிரதாப் ராமானுஜம், கலாநிதி அனுலா விஜேசுந்தர மற்றும் கலாநிதி தினேஷா சமரரத்ன ஆகியோர் இதன் ஏனைய உறுப்பினர்களாவர்.



