ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் சார்பில் தமிழ்ப் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட பா.அரியநேத்திரன் சிதறிக்கிடக்கும் தமிழ்த் தேசிய உணர்வுத் தளத்தை மீளக்கட்டமைப்பதில் காத்திரமான பங்காற்றியுள்ளார் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் கூறியுள்ளார்.
தமிழ் பொதுவேட்பாளர் என சில தரப்பினரால் களமிறக்கப்பட்ட அரியநேந்திரனை தமிழ் மக்கள் நிராகரித்திருந்தனர். தமிழ் பொதுவேட்பாளர் என களமிறக்கப்பட்டவரை விட, வடக்கு கிழக்கில் இரண்டு மடங்கிற்கும் அதிக வாக்குகளை தென்னிலங்கை சிங்கள கட்சிகள் பெற்றிருந்தனர். சுமார் 5 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை எதிர்பார்த்திருந்த ஏற்பாட்டாளர்கள், தேர்தல் முடிவினால் பெரும் ஏமாற்றமடைந்திருந்தனர்.
இந்த பின்னணியில், பொதுவேட்பாளர் தரப்பிலுள்ள பொ.ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,
ஒரு இனத்தைத் தேசமாகக் கட்டியமைப்பதில் அந்த இனம் பேசுகின்ற மொழி, தாயகமாகக் கொண்டிருக்கும் நிலப்பரப்பு, பண்பாடு ஆகியன வகிக்கும் பங்களிப்புகளுக்கு நிகராக தேசம் என்ற உணர்வு நிலையும் இன்றியமையாதது. யுத்தத்தின் பின்னரான தமிழர் அரசியலில் தேசம் என்கின்ற உணர்வு நிலை தமிழ்ச் சூழலில் ஊடுருவியுள்ள பெரும்பான்மைக் கடசிகளாலும் அவர்களின் எடுபிடிகளாலும் மழுங்கடிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையிலேயே தமிழ் மக்களைத் தேசமாக மீளவும் ஒருங்கிணைக்கும் நோக்கோடு நிறுத்தப்பட்ட தமிழ்ப் பொதுவேட்பாளர் தான் பெற்ற கணிசமான வாக்குகளின் மூலம் தமிழ்த் தேசியத்தின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை ஊட்டியுள்ளார்.
நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தென்னிலங்கை கட்சிகளின் பிரதான வேட்பாளர்கள் வடக்கு, கிழக்கில் கோடான கோடி பணத்தைச் செலவழித்து தமிழ் வாக்குகளை வியாபாரப் பண்டமாக்கிக் கொள்வனவு செய்ய முயன்றனர். இதற்குத் தமிழ் அரசியல்வாதிகள் சிலரும் துணைபோயினர். ஆனால், விலை போகாத தமிழர்களாக இரண்டேகால் இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் தமிழ்ப் பொதுவேட்பாளரின் சங்குச் சின்னத்துக்குத் தங்கள் வாக்குகளை வழங்கியுள்ளனர். தமிழ்த் தேசிய அரசியலை சீர்செய்து நேர்செய்யும் பயணத்தில் பொதுவேட்பாளர் பெற்றிருக்கும் வாக்குகள் பலமான அடித்தளத்தை உருவாக்கி இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கில் பொதுவேட்பாளர் பிரச்சாரத்துக்காக பல கோடி ரூபா வாரியிறைக்கப்பட்டதுடன், பொதுக்கூட்டங்களுக்கு பணம் வழங்கியும் ஆட்கள் அழைத்து வரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.