துண்டுதுண்டாக வெட்டப்பட்டு சூட்கேஸில் அடைத்து வீசப்பட்ட பாலியல் தொழிலாளி

Date:

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் குமரன் குடில் குடியிருப்பு பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ரத்த கரைகளுடன் சூட்கேஸ் ஒன்று கிடந்தது, அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் துரைப்பாக்கம் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் துரைப்பாக்கம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சூட்கேசை திறந்து பார்த்தனர். அப்போது, இளம்பெண் ஒருவரின் சடலம் சூட்கேஸில் இருந்தது. மேலும் அந்தச் சடலம் துண்டு, துண்டாக வெட்டப்பட்டு சூட்கேஸில் அடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சூட்கேஸைப் பறிமுதல் செய்த போலீஸார் அதிலிருந்த இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் கொலை செய்யப்பட்ட பெண் யார் என்று போலீஸார் விசாரித்தனர். இதற்காக தமிழகம் முழுவதும் காணாமல் போன பெண்களின் பட்டியல் அடிப்படையில் போலீஸார் விசாரித்தனர். அதைத் தொடர்ந்து சூட்கேஸ் வீசப்பட்ட பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களை போலீஸ் ஆய்வு செய்தனர். போலீஸாரின் தொடர் விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண், சென்னை மணலியைச் சேர்ந்த தீபா (35) எனத் தெரியவந்தது. அவர் பாலியல் தொழிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

உடனடியாக தீபாவின் குடும்பத்தினரை போலீஸார் தொடர்பு கொண்டு விவரத்தைக் கூறினர். அப்போது கடந்த இரண்டு நாள்களாக தீபாவைக் காணவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து தீபா குடும்பத்தினரிடம் போலீஸார் விசாரித்தபோது அவர் ஊதுபத்தி குடோனில் வேலை செய்து வருவதாகக் கூறினர். அதனால் தீபாவை துரைப்பாக்கம் பகுதிக்கு அழைத்து சென்றது யார் என்று விசாரித்தபோது துரைப்பாக்கம் பகுதியில் வசிக்கும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 25) என்ற இளைஞர் மீது போலீஸாரின் சந்தேகம் விழுந்தது. அதனால் மணிகண்டனைப் பிடித்து விசாரித்தபோது தீபா கொலைக்கான காரணம் தெரியவந்தது.

சம்பவத்தன்று மணிகண்டன், வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவர், தீபாவை போனில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். தனிமையிலிருக்க 6,000 ரூபாய் கொடுப்பதாக தீபாவிடம் மணிகண்டன் கூறியதாகத் தெரிகிறது. ஆனால் தீபா, கூடுதல் பணம் கேட்டதாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து மணிகண்டனின் வீட்டுக்கு தீபா வந்திருக்கிறார். பின்னர் பணம் கொடுப்பதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இந்தக் கொலை நடந்திருப்பது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

மேலும் மணிகண்டன், தன்னுடைய உறவினர் வீட்டில் தங்கியிருந்து சென்னையில் உள்ள கார் கம்பெனியில் பணியாற்றி வருவதும் விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து துரைப்பாக்கம் போலீஸார் கூறுகையில், ‘தீபாவைக் காணவில்லை என்று அவரின் குடும்பத்தினர் தேடியபோது அவரின் செல்போன் சிக்னல் துரைப்பாக்கத்தைக் காட்டியுள்ளது. அதனால் தீபாவைத் தேடி அவரின் உறவினர்கள் துரைப்பாக்கத்துக்கு வந்திருக்கிறார்கள். இந்தச் சமயத்தில்தான் தீபாவுடன் ஏற்பட்ட பணத்தகராறில் அவரை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த மணிகண்டன், அவரின் சடலத்தை அந்தப்பகுதியில் புதிதாக கட்டிவரும் கட்டடத்துக்குள் வீசியிருக்கிறார். சடலத்தை எடுத்துச் செல்ல மணிகண்டன், புதிதாக சூட்கேஸ் ஒன்றையும் வாங்கியிருக்கிறார். தீபாவின் சடலத்தை சூட்கேஸில் வைக்க வசதியாக துண்டு துண்டாக வெட்டியிருப்பதும் தெரியவந்துள்ளது. தீபாவை கொலை செய்த குற்றத்துக்காக மணிகண்டனை கைது செய்திருக்கிறோம். தொடர்ந்து விசாரித்த வருகிறோம்’ என்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஒரு சில கொடுங்கோலர்களால் உலகம் நாசமாகிறது: ட்ரம்பை மறைமுகமாக சாடிய போப்!

போர்களுக்காக பில்லியன் கணக்கில் செலவழிக்கும் தலைவர்களை போப் கடுமையாகச் சாடியதோடு, "ஒரு...

விவசாயி சின்னத்தை நாதக பயன்படுத்த தடை கோரிய வழக்கு தள்ளுபடி

ஜனதா கட்சியின் ‘ஏர் உழவன்’ சின்னத்தைப் போல இருக்கும் விவசாயி சின்னத்தை...

ஆயுதங்களுடன் சிக்கிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி வசம் ஆயுதங்கள் இருப்பதாக கொழும்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்