எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் என்ற கோசத்துடன் சில தரப்புக்களால் முன்னிறுத்தப்பட்டுள்ள பா.அரியநேந்திரனை ஆதரிப்பதென இலங்கை தமிழ் அரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை தீர்மானித்துள்ளது.
தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிப்பதென வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியதாக, வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், உதயன் பத்திரியை உரிமையாளருமான ஈ.சரவணபவன் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை கூட்டத்தில் அந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்படவில்லையென, அந்த கிளை உறுப்பினர்கள் சிலர் தமிழ்பக்கத்தை தொடர்பு கொண்டு விளக்கமளித்தனர்.
தாம் எதிர்ப்பை பதிவு செய்ததாகவும், ஏகமனதாக அந்த தீர்மானம் நிறைவேற்றப்படவில்லையென்றும் தெரிவித்தனர்.
பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது என குறிப்பிடுமாறு கேட்டுக்கொண்ட போதும், தொகுதிக்கிளை தலைவர் ஈ.சரவணபவன், தனது முகநூலில் உண்மைக்குப்புறம்பாக, எகமனதாக நிறைவேற்றப்பட்டதாக குறிப்பிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தின்போது, தாம் சரவணபவனிடம் சில கேள்விகளை கேட்டதாகவும் தெரிவித்தனர்.
பிரச்சார பணிகள் நிறைவடையும் தறுவாயில் பொதுவேட்பாளர் ஆதரவை ஏன் எடுத்ததென்றும், ஆரம்பத்திலேயே இந்த முடிவை எடுத்திருந்தால், பத்திரிகைக்கு வரும் விளம்பரங்களில் பாதிப்பு ஏற்படும் என்றா அல்லது பொதுவேட்பாளர் தரப்பிடம் விளம்பர பணம் பெறும் பேரத்திற்காகவா ஆதரவை தள்ளி வைத்திருந்தீர்கள் என கேட்டதாகவும் தெரிவித்தனர்.
எனினும், தமது கேள்விக்கு சரவணபவன் சரியான பதிலளிக்கவில்லையென்றும் அவர்கள் தெரிவித்தனர்.



