கேரளாவில் கடந்த வாரம் நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானது. அதில் கேரள திரைத் துறையில் பாலியல் துஷ்பிரயோகம் குறித்த பல அதிர்ச்சியூட்டும் செய்திகள் இடம்பெற்றிருந்தன. அதைத் தொடர்ந்து பல்வேறு நடிகைகளும் தங்களுக்கு நடந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர்.
அதில் பல பிரபல நடிகர்களும், டெக்னிஷியர்களின் பெயர்களும் அடிபடுகிறது. இந்த நிலையில், மலையாள திரையுலகில் இயங்கிவரும் நடிகை மினு முனீர், தன்னிடம் தவறாக நடந்து கொண்ட நடிகர்கள் உள்பட 7 பேர் மீது சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் செவ்வாய்க்கிழமை புகார் அளித்தார்.
நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா, மணியன்பிள்ளை ராஜு, எடவேல பாபு, தயாரிப்பு நிர்வாகிகள் நோபல் மற்றும் விச்சு, தயாரிப்பாளரும், வழக்கறிஞர்கள் காங்கிரஸ் தலைவருமான அட்வ வி எஸ் சந்திரசேகரன் ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
அவர்கள் ஒவ்வொருவருக்கும் எதிராக தனித்தனி புகார் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டது. புகாரில், குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து தான் பாலியல் துஷ்பிரயோகத்தை எதிர்கொண்ட சூழ்நிலைகள் மற்றும் இடங்களை மினு தெளிவுபடுத்தினார்.
நடிகை தனது புகாரில் உறுதியாக இருக்கிறார். எந்த ஒரு சமாதான முயற்சியையும் ஏற்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். பெண் போலீஸ் அதிகாரிகளும் நடிகைக்கு ஆதரவாக உள்ளனர்.
“சம்பவத்தின் போது, போலீசில் புகார் செய்ய எனக்கு தைரியம் இல்லை. ஆனால் இப்போது, சட்டப்படி செல்ல முடிவு செய்துள்ளேன். வேறு எந்த பெண் நடிகைக்கும் இதுபோன்ற அவல நிலை வரக்கூடாது” என்று கொச்சியில் செய்தியாளர்களிடம் மினு கூறினார்.
முன்னதாக ரூரல் போலீசில் புகார் கொடுப்பதாக மினு தெரிவித்திருந்தார். தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர் விச்சுவுக்கு எதிரான டிஜிட்டல் ஆதாரங்களை நடிகை போலீஸில் சமர்ப்பித்ததாகத் தெரிகிறது. வரும் நாட்களில் மினுவின் வாக்குமூலத்தை விசாரணை குழுவினர் நேரில் பதிவு செய்யலாம்.
சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முன் புகார்கள் இருப்பதால், குற்றப் பிரிவு தலைமையகத்தில் வழக்குப் பதிவு செய்யப்படும்.