மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நொச்சிமுனை பகுதியில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமான முறையில் மிக நுணுக்கமாக வைக்கப்பட்டிருந்த போலி ஆவணக் காப்பகத்துடன் சந்தேகநபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்த நபர் பல வருடங்களாக பல்வேறு அரச அதிகாரிகளின் கையொப்பங்களைப் பயன்படுத்தி மோசடியான ஆவணங்களை தயாரித்து வருவது விசாரணைகளின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1960ஆம் ஆண்டைப் பயன்படுத்தி பத்திரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கவின் கையொப்பத்தைப் பயன்படுத்தி பத்திரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அத்துடன், உயிரிழந்த சட்டத்தரணிகளின் கையொப்பங்களைப் பயன்படுத்தி சந்தேக நபர் பல்வேறு உரிமங்களை தயாரித்துள்ளதாக விசாரணை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயல்பாட்டில், 205 வெற்று நில உரிமைப் படிவங்கள், 58 வெற்று பரிசு வவுச்சர் படிவங்கள், 63 வெற்று நில பரிமாற்ற படிவங்கள், 300 வெற்று நில அனுமதிப்பத்திரங்கள்,
பல்வேறு அதிகாரிகளின் மாதிரி கையொப்பங்களுடன் 30 ஆவணங்கள், 12 வெவ்வேறு நபர்களின் தேசிய அடையாள அட்டைகளின் 12 நகல்கள், மூன்று நபர்களின் ஓட்டுநர் உரிமத்தின் 03 நகல்கள் ஆகிய போலி ஆவணங்கள் மீட்கப்பட்டன.
தயாரிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட 135 கோப்புகள், 19 போலி ரப்பர் முத்திரைகள், Canon வகை அச்சுப்பொறி, ஆங்கில தட்டச்சு இயந்திரம் ஆகியவற்றை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
காத்தான்குடி பொலிஸார் சந்தேக நபரை மட்டக்களப்பு பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, சந்தேக நபரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.



