பங்களாதேஷ் அணிக்கு எதிரான 3வது ரி20 போட்டியில், 28 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இலங்கை அணி, 2-1 என தொடரையும் கைப்பற்றியது.
மதீஷ பத்திரன தொடை காயத்தால் வெளியேறியதால் அணியில் இடம்பிடித்த நுவான் துஷார ஹட்ரிக் சாதனையுடன் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தி, பங்களாதேஷின் முதுகெலும்பை உடைத்தார்.
சில்ஹெட்டில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ஓட்டங்களை பெற்றது.
குசல் மெண்டிஸ் இலங்கையை காப்பாற்றினார். அவர் 55 பந்துகளில் 86 ஓட்டங்களை பெற்றார். ரி20 போட்டிகளில் அவரது அதிகபட்ச ஓட்டம் இதுதான். பங்களாதேஷ் அணிக்கு எதிரான 8 போட்டிகளில் 6 அரைச்சதங்கள் அடித்துள்ளார்.
இன்றைய போட்டியில் குசல் மெண்டிஸிற்கு அடுத்த அதிகபட்ச ஓட்டம் 19. தசுன் சானக அதற்கு சொந்தக்காரர்.
பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் தஸ்கின் அஹமட், ரிஷாத் ஹெசைன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
175 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்பில் பின்வரிசை வீரர்கள் தஸ்கின் அஹமட் 31, ரிஷாத் ஹெசைன் 53 ஓட்டங்களை பெற்றனர்.
போட்டியின் 4வது ஓவரை வீச ஆரம்பித்த நுவான் துஷார ஹட்ரிக் சாதனை படைத்தார். இதனால் 15 ஓட்டங்களுக்கு 4 விக்கெட் என தத்தளித்த பங்களாதேஷ் தோல்வியை தழுவியது.
நுவான் துஷார 20 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
அவரே ஆட்டநாயகன்.
தொடர் நாயகன் குசல் மெண்டிஸ்.



